இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் தொடரின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
பயிற்சியாளர் பிளட்சரை ஓரங்கட்டும் வகையில் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதே நேரத்தில் பிளட்சர் தான் எங்களுக்கு ‘பாஸ்’ என்று டோனி தெரிவித்தார். அதோடு உலக கோப்பை வரை அவர்தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அவருக்கு கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
ரவிசாஸ்திரியின் நியமனத்துக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதற்கிடையே பயிற்சியாளர் பதவியில் பிளட்சர் நீடிக்க ரவிசாஸ்திரி ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது மிகப்பெரிய சாதனையாகும். டெஸ்ட் தொடரை இழந்த பிறகு ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நான் எதிர் பார்த்ததை விட அதிகமாக இந்திய வீரர்கள் செயல்பட்டன.
அணிக்கு பிளட்சர்தான் பயிற்சியாளர். அவர் பல்வேறு விஷயங்களை கையாண்டார். 100 டெஸ்ட்களில் பயிற்சியாளராக இருந்து சாதனை புரிந்தவர். அற்புதமான பயிற்சியாளர் பல்வேறு விஷயங்களில் திறமையானவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரியத்திடம் நான் பேசுவேன்.
ஒருநாள் தொடரோடு எனது பணி முடிந்துவிட்டது. இதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.