அம்பாறை, புராதன ரஜகலதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 1500 வருடங்கள் பழைமை வாய்ந்ததாக கருதப்படும் சங்கு உட்பட பல புராதன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது சங்கு, கல்வெட்டு ஒன்றின் பகுதி, வழிகாட்டல் குறி என்பன கண்டெடுக்கப்பட்டதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
புத்தர் சிலை காணப்பட்ட இடத்துக்கு கீழாக அமைக்கப்பட்டிருந்த செங்கல் பெட்டகம் ஒன்றிலிருந்து இப்புராதன சங்கு பாதுகாக்கப்பட்டிருந்ததாக பேராசிரியர் ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
அநுராதபுர யுகத்தின் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகனான லஞ்சதீச மன்னனால் இவை புதைக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகளிலும் ரஜகலதென்ன புனித பூமியில் காணப்படும் தகவல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் துறை பேராசிரியர் பத்மசிறி கன்னங்கர தெரிவிக்கின்றார்.
இந்த அகழ்வாராய்ச்சிகளின் போது கலாநிதி அலெக்ஸாண்டர் கபுகொடுவ, சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர், கிழக்கு மாகாண தொல் பொருள் பணிப்பாளர் நில்மல்கொட, பக்கிஎல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயலத் சுரவீர ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.