அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி…
கட்சி நலன் – கட்சி தலைவர்கள் என்று பாராமல், தனக்கு எது சரி என்று எண்ணத் தோன்றுகின்றதோ அந்தக் கருத்தை – விமரிசனத்தை நேருக்கு நேர், முகத்துக்கு எதிரே துணிச்சலாக – நேர்மையாக முன்வைக்கும் ஒரு வல்லமையை இன்று நாங்கள் இழந்துவிட்டோம் என்ற சேதியறிந்து கண் நனைந்து போயுள்ளேன்.
கடந்த 25.09.2016 செவ்வாய்க்கிழமை அன்று அன்டனி ஜெகநாதன் அவர்களை வற்றாப்பளையில் முதியோர் சங்கக்கூட்டத்தில் சந்தித்திருந்தேன். இது தான் அவருடனான எனது இறுதிச்சந்திப்பாக அமையும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
கற்றறிந்த நல்ல பாரம்பரியத்தினூடாக அரசியலுக்குள் பிரவேசித்த எளிமையான மனிதர் அன்டனி ஜெகநாதன் அவர்கள். நெருக்கடியான போர்ச்சூழலுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டதனாலோ என்னவோ, நீண்ட காலமாக தமிழ் இனத்தின் விடுதலைக்கு ஆதரவாகவும், சமுக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி ஆக்கிரமிப்பு, கனியவளச்சுரண்டல், அதிகார துஸ்பிரயோகம் இவற்றுக்கு எதிராக கடுமையாக போராடிய ஒரு கொள்கையாளன். தீவிரமான தமிழ்த் தேசியப்பற்றாளன்.
கட்சியின் தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால், நீதியின் பக்கம் நின்று பணி செய்ய வேண்டும். அந்த நீதியின் பக்கம் நிற்பவர்களை ஆதரித்து பலப்படுத்த வேண்டும். அம்மனிதர்களை மக்களுக்கு நல்லவர்கள் என்று அடையாளம் காட்டிவிட வேண்டும் என்ற நேர்மையும் – உளத்தூய்மையும் கொண்ட மனிதர்.
கொண்ட கொள்கையில் உறுதியாக, நேர்மையாக இறுதிவரை விசுவாசமாக உழைத்த அன்டனி ஜெகநாதன் அவர்களின் மறைவு எமக்கெல்லாம் அதிலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பேரிழப்பாகும்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களின் மீளாத்துயரில் நாமும் இரண்டறக் கலந்திருப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பிலும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பிலும் எமது புரட்சிகர அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.
ந.சிவசக்தி ஆனந்தன், பா.உ,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு,
வன்னி மாவட்டம்.