அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்” NFGGயிடம் இரா. சம்பந்தன் தெரிவிப்பு!

279

 

img-20161002-wa0004“தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.  இறுதியில், ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலம், இறுதி அரசியல் தீர்வானது எல்லோரது அங்கீகாரத்தையும் பெற வேண்டியுள்ளதால் , அந்த தீர்வைப் பொறுத்த வகையில் அடிப்படை விடயங்களில் எல்லோருடைய சம்மதமும் மிக அவசியம்.” என TNA தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

கடந்த 29.09.2016 அன்று இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்பு வதிவிடத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில்  NFGGயின் தவிசாளர் பொறியாலாளர் அப்துர் ரஹ்மான், தலைமைத்துவ சபையின் தவிசாளர் சிறாஜ் மஸூர் மற்றும் தேசிய அமைப்பாளர் MBMபிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக விரிவாக ஆராயவும் விவாதிக்கவும் பட்டது.

சந்தேகங்களை வளர்ப்பதை விட, அதைப் பேசித் தீர்ப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாகும். அந்த வகையில், தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே, பரஸ்பர சந்தேகங்கள் அதிகரித்து வரும் நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியமானது.
இந்த சந்திப்பில், சிறுபான்மை மக்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்ட வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறிய கருத்துக்கள் வருமாறு:

“இதற்குப் பிறகு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாகக் கூடிய நிலமை மீண்டும் எப்போது வரும் என்று தெரியாது. தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதை இழந்தால், பெரும் பின்னடைவாக இருக்கும்.

இறுதியில், ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலம், அரசியல் தீர்வானது எல்லோரது  அங்கீகாரத்தையும் பெற வேண்டியுள்ளதால் , அந்த தீர்வைப் பொறுத்த வகையில் அடிப்படை விடயங்களில் எல்லோருடைய சம்மதமும் மிக அவசியம்.”

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக, தமிழ்- முஸ்லிம் மக்களிடையே நிலவும் ஆழமான கருத்து வேறுபாடு குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

“வடக்கு கிழக்கு இணைப்பு, அது தமிழ் பேசும் மக்களது தனியான பிரதேசம் என்பது எங்களது நீண்டகாலக் கோரிக்கை. 1957 இல் பண்டாரநாயக்கா அதற்கு உடன்பட்டிருந்தார். பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் அது எழுத்து மூலம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக அது இணைக்கப்பட்டது.

பின்னர் ஜே.வீ.பி. தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது.  இணைப்பின்போதான ஒரு நடைமுறைத் தவறையே (Procedural Flaw) இதற்குக் காரணமாகக் காட்டினார்கள்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கை” என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், கிழக்கு முஸ்லிம்களது நிலைப்பாடு குறித்துNFGGயால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

“1987க்குப் பின்னர் இவ்விணைப்பு ஏற்படுத்தப்பட்டபோது, அது குறித்த எதிர்கால அச்சமும் சந்தேகமும் மட்டுமே இருந்தது. ஆனால்,இப்போது அந்த அச்சத்துடன்,  கடந்த கால கசப்பான அனுபவங்களும் சேர்ந்து நிலமையை மேலும் சிக்கலாக்கி விட்டன.

குறிப்பாக 1990 இன் பயங்கர அனுபவங்கள், ஆழமான வடுவாக முஸ்லிம்களின் மனதில் பதிந்துள்ளன.

எனவே வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு விடயம் அணுகப்பட வேண்டும் . எல்லோரது இணக்கத்துடன்தான், இந்த விடயம் குறித்த இறுதி நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்” என NFGG வலியுறுத்தியது.

இதற்குப் பதிலளித்த சம்பந்தன் ஐயா, கீழ்வரும் கருத்துகளை முன்வைத்தார்.

“எல்லாவற்றையும் சமரசத்தின் அடிப்படையில், நாம் பேசித் தீர்க்க முடியுமாக இருந்தால் அதுதான் மிகச் சிறந்தது.

இந்தக் கருமங்கள் இன்றைக்கோ நாளைக்கோ முடியப் போவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களுமாகிய நாங்கள்,  பரம்பரை பரம்பரையாக இங்குதான் வாழப் போகிறோம்.

ஆனபடியால், எங்களுக்கு மத்தியில் சில சமரசங்கள் தேவை. நாங்கள் பேசித்தான் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

சிங்களவர்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ,தமிழர்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ,முஸ்லிம்களுக்கு மாத்திரம் திருப்தியான தீர்வு என்றோ ஒரு தீர்வு வர முடியாது.

இறுதித் தீர்வு எல்லோருக்கும் திருப்தியளிப்பதாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவாடல்களும் (Engagement)உரையாடல்களும் (Dialogue), இதற்கு மிகவும் அவசியம் என்பதனை இதன் போது NFGG பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையாக, நேரடி மக்கள் சந்திப்புகளை ஏற்படுத்த NFGG தயார் எனவும், அவற்றில் கலந்து கொள்ளுமாறும் TNA தலைவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

அவற்றில் கலந்து கொள்ள இரா. சம்பந்தன் அவர்கள் இணக்கமும் தெரிவித்தார்.

“கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தரப்பும் தமிழ்த் தரப்பும் இணைந்து,ஆட்சியில் பங்காளர்களாக தொடர்ந்து செயற்படுவது நல்ல அறிகுறியே , எனினும் ஆட்சியில் பங்காளிகளாக இருப்பது போலவே,இரு தரப்பு மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்  பங்காளிகளாக இருக்க வேணடும்” என NFGG வலியுறுத்தியது.

தேசிய நலன் சார்ந்த விடயங்களில் எதிர்க் கட்சித் தலைவரின் பணிகள் குறித்தும் தமது அவதானங்களையும் எதிர்பார்ப்புகளையும் இசந்திப்பின் போது NFGG முன்வைத்தது.

இன்றைய சூழலில்  இடம்பெற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமைந்திருந்தது.

SHARE