ஆபிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒரு ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில்
தாக்குதலை நடத்தியவர்களில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிபர் கிறிஸ்டியன் கபோர் கூறுகிறார். இதையடுத்து தலைநகர் ஔகடௌகுவிலுள்ள ஹோட்டல் ஸ்பெளிண்டிட் மீதான முற்றுகைத் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 18 நாடுகளின் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாட்டு மக்களிடம் பிரபலமான அந்த ஹோட்டலில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 26 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முடிந்த அளவுக்கு ஆட்களை சுட்டுக் கொன்ற பிறகு, அந்தத் தீவிரவாதிகள் ஹோட்டலுக்கு தீ வைத்தனர் என, உயிர் தப்பியவர்கள் கூறுகின்றனர். இத்தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என இஸ்லாமிய மக்ரெபிலுள்ள அல்கெய்தா அமைப்பு கூறியுள்ளது. இதனிடையே நாட்டின் வட பகுதியில் தனியாக இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கடத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.