போராளிகளாகும் ஆசையில் ஐ.எஸ்.குழுவில் இணைந்த ஆஸ்திரியா இளம்பெண்களை செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஆசையில் சமரா மற்றும் சபீனா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியேறிய இவர்கள் இருவரும் ஐ.எஸ்.குழுவில் இணைந்து அவர்களின் இணையத்தளத்தில் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கும் நிலைக்கு எட்டினர்.இந்நிலையில் 17 வயதான சமராவுக்கு ஐ.எஸ்.குழுவினரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கால்நடையாக எல்லை கடக்க முயன்ற சமராவை ஐ.எஸ்.குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்திருந்தது. சமரா தப்பிக்க முயற்சிப்பதற்கு முன்னர் ஐ.எஸ்.தீவிரவாதிகளால் வலுக்கட்டாயமாக செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. புதிதாக அந்த குழுவில் இணையும் தீவிரவாதிகளுக்கு பாலியல் தேவைகளை தீர்த்து வைக்கும் பொருட்டே இவர்களை பெரும்பாலும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. வியன்னாவில் உள்ள இஸ்லாமிய மத போதகர் ஒருவரது பேச்சுக்களை நம்பியே போஸ்னியா அகதிகளான இந்த இரு இளம்பெண்களும் துருக்கி வழியாக சிரியா சென்றடைந்ததாக கூறப்படுகிறது.
|