இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று உங்கள் பிள்ளைகள் எதுவித அச்சமும் இன்றி எங்கும் சென்றுவர முடிகின்றது-கருணா

436
karuna-praba-and-karuna-mara
கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் பாதையினை மாற்றாவிட்டால் இங்கு தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாக மாற்றமடையக்கூடிய ஆபத்து உள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் நிகழ்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எங்களுக்கு முன்னர் கிழக்கில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நாங்கள் வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காகவே அங்கு சென்று போராடினோம்.

இந்த போராட்டம் காரணமாக ஒன்பதாயிரம் போராளிகளை கிழக்கு மாகாணத்தில் இழந்துள்ளோம். அதிலும் ஆனையிறவு சமர், ஜயசிக்குறு சமர் என்பனவற்றில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை நாங்கள் இழந்துள்ளோம். இவர்கள் அனைவரும் எமது சொத்துகள். இதனால் நாங்கள் எந்த நன்மையையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று உங்கள் பிள்ளைகள் எதுவித அச்சமும் இன்றி எங்கும் சென்றுவர முடிகின்றது. நாங்கள் எதுவித அச்சமும்மற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இந்த யுத்தம் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாக சென்றிருக்கும்.

நானும் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டு போராட்டத்துக்கு சென்றவன். ஆயுதப் போராட்டம் முதல் இராஜதந்திர போராட்டம் வரையில் பங்குகொண்டவன். நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்யும் போதே எமது பலம் பெருகும் என அன்று தெரிவித்த போது என்னை துரோகியாக்கினார்கள். அதனைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை.

எமது மக்களை காப்பாற்றவே நான் போராட்டத்துக்கு சென்றவன்.அந்த மக்களை காப்பாற்றவே நான் ஜனநாயக ரீதியில் செயற்பட அதில் இருந்துவந்து எமது மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை செய்துவருகின்றேன்.

நான் அன்று இருந்தது போன்றே இன்றும் உள்ளேன். எனது காலத்தில் எமது மக்கள் சகல உரிமையும் படைத்த மக்களாக வாழவேண்டும். கடந்த 30 வருடகால போராட்டம் எமது மாவட்டத்தினை பாரிய பின்னடைவுக்கு கொண்டு சென்றுள்ளது. அதனை நாங்கள் மீட்க வேண்டும். இன்று பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாங்கள் எமது மக்களை சகல வழிகளிலும் அபிவிருத்தியடைய செய்ய வேண்டும்.மிக முக்கியமாக எமது கல்வி நிலை இன்று பாரிய பின்னடைவில் உள்ளது. அவற்றினை கட்டியெழுப்ப என்ன வழிகள் உள்ளது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்து செல்லுமாயின் தமிழர்களின் பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் உள்ள உயர் பதவிகளுக்கு மாற்று இனங்களை சேர்ந்தவர்கள் வரக்கூடிய நிலையேற்படும்.

நாங்கள் இன்னும் பத்திரிகை அறிக்கைகளுக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் செல்வோமானால் எமது இனத்தின் தலைவிதியை யாராலும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையே ஏற்படும்.

நாங்கள் அனைத்து வழிகளிலும் பின்னோக்கியே உள்ளோம். நாங்கள் அரசியலில் பலமான சக்தியாக உள்ள போதே எமது சமூகம் வளர்ச்சியடையும் எதிர்ப்பு அரசியலினால் எமது சமூகத்தினை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவேண்டாம்.

அரசியலில் நாங்கள் பலமாக இருக்கும்போதுதான் எமது உரிமையினையும் காப்பாற்றமுடியும் எமது இனத்தினையும் காப்பாற்றமுடியும்.இன்று சகோதர இனத்தில் உள்ள அரசியல் செல்வாக்கே இன்று அவர்களின் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முழுமையான அபிவிருத்திக்கு காரணமாகும்.

நாங்கள் படுவான்கரை பகுதியில் ஒரு அமைச்சரை அல்லது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கும் போதே கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்யமுடியும்.

இதனை எதிர்காலத்தில் உணர்ந்த மக்களாக நீங்கள் செயற்படவேண்டும். நான் உங்களிடம் இனி வாக்கு கேட்டு வரமாட்டேன். ஆனால் நீங்கள் உங்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒருவரை தெரிவு செய்து அவரை ஆளுந்தரப்பில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.

TPN NEWS

 

SHARE