இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர்.
பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின் வாயிலுக்கருகே குண்டு ஒன்று வெடித்தது.
இந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின், பல துப்பாக்கிதாரிகள் அந்த இடத்தில் அதிரடியாக நுழைந்து ஈத் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
சில தாக்குதலாளிகள் தம்மைத்தாமே வெடிக்கச் செய்து கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பாக்தாதின் ஜன நெரிசல் மிக்க ஷியா வணிகப் பகுதி ஒன்றில் நடந்த மிக மோசமான குண்டுத்தாக்குதலில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குள் இந்த தாக்குதல் வருகிறது.