நடிகர் சத்தியராஜின் வில்லத்தனமான நடிப்பில் வெளியான நூறாவது நாள் படத்தை போன்ற திகிலூட்டும் சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராபின்சன் லேனில் இறந்த சகோதரியின் உடலுடன் 5 மாத காலம் வாழ்ந்து வந்த நபரால் கொல்கத்தா நகர மக்கள் மிரட்சி அடைந்துள்ளனர்.
ராபின்சன் லேனில் உள்ள வீட்டில் 44 வயதான பார்த்தா டே வசித்து வருகிறார். பார்த்தாவுடன் அவரது தந்தை அரபிந்தா டே, 50 வயதான சகோதரி டெப்ஜானி வசித்து வந்தனர். இரு லேப்ரடார் நாய்களை பார்த்தாவின் சகோதரி டெப்ஜானி வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று பார்த்தாவின் தந்தையான அரபிந்தா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அங்கு போலீசார் வருகை தந்தனர். அப்போது பார்த்தாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த போலீசார் குழப்படைந்தனர். இதனால் இரு போலீசாரை பார்த்தாவின் காவலுக்கு வைத்துவிட்டு போஸ்ட்மார்ட்டத்திற்காக அரபிந்தாவின் சடலத்தை எடுத்துச்சென்றனர்.
எனினும் பார்த்தாவின் நிலைமை மேலும் மோசமடையவே, இரு காவலர்களும் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த உயரதிகாரிகள், பார்த்தாவை அருகிலுள்ள ஷேக்ஸ்பியர் ரோடு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பார்த்தாவுடன் பேசிய போலீஸ் அதிகாரியின் மூளையில் லேசாக பொறி தட்டியது. பார்த்தா எதையோ மறைக்கிறார் என்று காவல் அதிகாரியின் மூளை கூறியது. இதையடுத்து நான் உனது சகோதரன் மாதிரி. என்னிடம் நீங்கள் வெளிப்படையாக பேசலாம் பார்த்தா என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
இந்த சென்டிமெண்ட் பேச்சால் உடைந்து போன பார்த்தா தனது வாழ்வின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விட்டார். அதில் அவர் கூறிய தகவல் கொல்கத்தா போலீசாரையே ஒரு கணம் மிரட்சி அடைய வைத்தது.
போலீஸ் அதிகாரியிடம் பார்த்தா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது;
கடந்த சில மாதங்களுக்கு முன் என் சகோதரி செல்லமாக வளர்த்து வந்த நாய்கள் இரண்டும் மர்மமான முறையில் மரணமடைந்தது. இதனால் வருத்தமடைந்த எனது சகோதரி வீட்டில் ஏதோ அமானுஷ்யம் நடமாடுவதாக கருதினார். இதனால் கடவுளை வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இப்படி உண்ணாவிரதம் இருந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்க முன் திடீரென எனது சகோதரியும் மரணமடைந்தார். அப்போது என் தகப்பனார் சகோதரியின் உடலை அடக்கம் செய்யலாம் என்று கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்து சகோதரி என்றாவது மீண்டு வருவாள் என்று கூறி இறந்த நாய்கள் சடலத்துடனும், சகோதரியின் சடலத்துடனும் வசித்து வருகிறேன். இது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் வளர்ப்பு நாய்களையும், எனது சகோதரியையும் நான் மிகவும் விரும்பினேன். ஆகையால் அவர்களை அடக்கம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. ஆகையால் அவர்களை தொடர்ந்து வீட்டிலேயே வைத்து தினமும் அவர்களுக்கு உணவு பரிமாறி பாதுகாத்து வருகிறேன் என்றார். இந்நிலையில்தான் தனது தந்தை நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார் என்றும் பார்த்தா கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் உயரதிகாரி முரளிதர் உடனடியாக பார்த்தாவின் வீட்டுக்கு விரைந்தார். வீட்டுக்குள் போலீசார் சென்ற ஒவ்வொரு அறையிலும் பெண்ணின் குரல் ஒன்று எதிரொலித்தது. இதனால் போலீசார் மிரண்டு போனார்கள். எனினும் டேப் ரெக்கார்டர் மூலம் ஒவ்வொரு அறையிலும் ‘கோஸ்பல் ஆப் ஜாய்ஸ் மேயர்’ என்ற பிரச்சார கேசட் ஒலிபரப்பப்பட்டது தெரிய வந்ததும் நிம்மதியடைந்தனர். இதையடுத்து பார்த்தாவின் படுக்கையறைக்குள் சென்ற முரளிதர் கண்ட காட்சி நெஞ்சை உறைய வைத்தது. பார்த்தாவின் கட்டிலுக்கு கீழே இறந்த போன நாயின் எலும்புக்கூடை கண்ட வித்யாதர், பார்த்தாவை கட்டிலை ஒட்டி போடப்பட்டிருந்த மற்றொரு சிறிய கட்டிலில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த எலும்புக்கூட்டை கண்டார். அது டேவின் 50 வயது சகோதரி டெப்ஜானியின் எலும்புக்கூடாகும். எலும்புக்கூட்டை சுற்றிலும் உணவு சிந்தியிருப்பதையும் கண்ட வித்யாதர், இறந்த சகோதரிக்கும், நாய்களுக்கும் பார்த்தா உணவு பரிமாறியதையும் உணர்ந்து கொண்டார்.
நெஞ்சை உறைய வைத்த இந்த காட்சிகளை கண்ட பின், நாய்களின் எலும்புக்கூடு மற்றும் பார்த்தாவின் சகோதரியின் எலும்புக்கூட்டையும் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வீடு முழுவதையும் வித்யாதர் சுற்றிப்பார்த்த போது வீட்டுக்குள் 12 லேப்டாப்கள், 12 கம்ப்யூட்டர்கள், ஒரு பியானோ ஆகியவை இருப்பதை கண்டதுடன், ஒரு அறையில் 20000-க்கும் மேற்பட்ட ஆன்மீக புத்தகங்கள் இருப்பதை கண்டார். அவையனைத்தும் தூசிகள் சூழ காணப்பட்டன. புத்தகம் இருந்த அறை பாழடைந்து பேய்கள் நடமாடும் இடம் போல் காணப்பட்டது.
அந்த சமயத்தில் தற்கொலை செய்து கொண்ட அரபிந்தா எழுதிய கடிதமும் அங்கு இருந்தது. அதில், என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன். இதற்காக யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. எனக்கு 77 வயது ஆகிறது. உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். குட் பை பார்த்தா, லவ் யூ, லவ் யூ என எழுதியுள்ளார்.
ஒரு வழியாக பார்த்தாவின் வீட்டில் ஆய்வை முடித்துவிட்டு காவல்நிலையத்துக்கு மீண்டும் திரும்பிய வித்யாதர், பார்த்தாவை மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதே போல் பார்த்தாவின் சகோதரி இயற்கையாகத்தான் மரணமடைந்தாரா என்று ஆராய்ந்து கூறுமாறு தடயவியல் நிபுணர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பார்த்தாவும், டெப்ஜானியும் பி.டெக். முடித்தவர்கள். பார்த்தா ஐ.டி. நிறுவனத்திலும், டெப்ஜானி இசை ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். தந்தை அரபிந்தாவும் பிரிட்டன் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக இருந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு பார்த்தாவின் தாய் மரணமடைந்த பின், அக்குடும்பத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. சில காலங்களுக்கு பின் அனைவருமே தங்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தங்கள் வீட்டில் வாடகை தங்கியிருந்த இருவர் தந்த வாடகை பணத்தை கொண்டே வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.
இவ்வளவு மெத்தப்படித்த இவர்கள் ஏன் இப்படி வித்தியாசமான சிந்தனை மூவருக்கும் தோன்றியது என்பது தான் யாருக்கும் புரியவில்லை…