உடல் அலுப்பைப் போக்க,என்றும் இளைமையோடு இருக்க,வாளிப்பான உடல் மற்றும் பளீரிடும் முக அழகைப் பெற சிகிச்சை தரும் மசாஜ் மற்றும் ஸ்பா மையங்கள் மத்தியில் பிலிப்பைன்ஸின் `மலைப் பாம்பு மசாஜ்` வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்து வருகிறது.
வித்தியாசமான இந்த மசாஜ் முற்றிலும் மலைப்பாம்புகளால் மட்டுமே செய்யப்படுவது ஆகும்.
ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பல நூறு தீவுகளைக் கொண்ட அழகிய நாடு. நான்குபுறமும் கடலால் சூழப்பட்ட பிலிப்பைன்ஸ் தீவுகள், பலவகைப் பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டு உல்லாசப் பிரியர்களை உற்சாகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் `சீபு` நகரத்தில் அமைந்துள்ள வன உயிரினங்களின் பூங்காவில்தான் இந்த மலைப்பாம்பு மசாஜ் அளிக்கப்படுகிறது. இதற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்கிறார் வன உயிரின பூங்காவின் மேனேஜர் ஜியோவானி ரோமராட்டே .
மேலும் அவர் கூறுகையில், “முதன் முறையாக மலைப்பாம்புகளிடம் மசாஜ் செய்ய வருபவர்களுக்கு சிறிது அச்சம் ஏற்படும். அது இயற்கையே. ஆனால் பாம்புகளின் சேவை பிடித்துப் போய் முதலில் வந்த வாடிக்கையாளர்களே மீண்டும் வருகிறார்கள்’ என்று அலற வைக்கிறார்.
2 கருப்பு அடர்பச்சை நிறம் கலந்த மலைப்பாம்பு,2 வெள்ளை நிற மலைப்பாம்பு என்று மொத்தம் 250 கிலோ கொண்ட 4 பாம்புகள் மசாஜ் செய்யவரும் வாடிக்கையாளரின் மேல் ஊர்ந்து இறுக்கி விலகும்.அப்போது நமது உடலில் ஊர்ந்தபடி அவை விடும் மூச்சுக் காற்று அடிவயிற்றில் உயிர் பயத்தை உருளவிடும்.
ஆனால் உதவிக் கேட்டு சத்தம் எழுப்ப முடியாது.இப்படியே 10 முதல் 15 நிமிடம் மலைப்பாம்புகள் மசாஜ் செய்யும் என்கிறார் ஹாவாய் நாட்டு சுற்றுலாப் பயணி இயான் மெக்கலன்.
இவர் சொல்வதைக் கேட்டால் இது ஸ்பா மசாஜ் இல்லை…ஸ்ஸ்ஸ் பா …மசாஜ் என்றுதான் சொல்ல வேண்டும்போல!