உலகக்கிண்ணம் 2015 – வெல்வது யார்? – முழுமையான பார்வை

506

cov2

உலகக்கிண்ணம் 2015 – வெல்வது யார்? – முழுமையான பார்வை

11வது உலகக்கிண்ணம்…
என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்…
சில எதிர்வுகூறல்கள், உலகக்கிண்ணம் பற்றி முன்னரே நான் Twitter, Facebook மூலமாகச் சொல்லியிருந்த விடயங்களையும் இங்கே சேர்த்துள்ளேன்.
உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாகத் தெரிவியுங்கள்.
அவை என்னுடைய முன்னோட்டத்தின் நீட்சியாகவே இருக்கும்.
——–

உலகக்கிண்ணம் வென்ற தலைவர்கள்.
இரு தடவை வென்றவர்கள் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியா – நியூ சீலாந்து மீண்டும் இணைந்து நடத்துகின்றன.
1992 ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளும் சேர்ந்து நடத்திய உலகக்கிண்ணம் முதல் தடவையாக வர்ண சீருடைகள், வெள்ளைப் பந்துகள் போன்றவற்றோடு, 15 ஓவர்கள் விதிமுறை, தொலைக்காட்சி ஒளிபரப்பில் புதிய புரட்சி என்று பல இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காத பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
இதெல்லாவற்றையும் விட, யாரும் எதிர்பாராத புதிய உலக ஒருநாள் சம்பியனையும் தந்திருந்தது.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதே நாடுகளுக்கு உலகக்கிண்ணம் திரும்பும் நிலையில், கிரிக்கெட்டில் நம்பமுடியாதளவு மிகப் பாரிய மாற்றங்கள்.
விரைவுத் துடுப்பாட்ட முறைகள், விதிகளில் பல்வேறு மாற்றங்கள், தொழினுட்பத்தின் முன்னேற்றத்தினால் நிறையவே வித்தியாசங்கள்.
14 நாடுகளுடன் மீண்டும் திரும்பும் உலகக்கிண்ணம் கடந்த உலகக்கிண்ணம் போலவே  போட்டிகளை நடத்தும் நாடுகள் இரண்டும் இறுதிப் போட்டியில் சந்திக்கக்கூடிய வாய்ப்பினை அதிகளவில் கொண்ட போட்டியாக அமையவுள்ளது.
களநிலை, காலநிலை சாதகத் தன்மை போட்டிகளை நடத்தும் இரு நாடுகளுக்கும், கூடவே தென் ஆபிரிக்காவுக்கும் அதிக சாதகத் தன்மையைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த அணிகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்கு கூடுதலான வாய்ப்புக்கள் இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சிம்பாப்வேயிடம் கண்ட அதிர்ச்சித் தோல்வியானது இலங்கையின் பந்துவீச்சின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, அதிர்ச்சிகளை ஏற்படுத்தி கிண்ணத்தை யாரும் எதிர்பாராமல் வெல்லும் அணியை ‘Dark Horses’ என்று குறிப்பிடுவார்கள்.
தொடர் ஆரம்பிக்க முதல், பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிடினும் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் அணி எனக் கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளைத் தாண்டி, பயிற்சி ஆட்டங்களில் காட்டிய பெறுபேறுகளின்படி சிம்பாப்வேயை உற்று நோக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
96இல் இலங்கை உலகக்கிண்ணம் வென்றபோது பயிற்றுவித்த தேவ் வட்மோர் இப்போது சிம்பாப்வேயை நெறிப்படுத்துகிறார் என்பது அவ்வணி பற்றி இன்னும் கொஞ்சம் கவனமாக ஏனைய அணிகள் இருக்கவேண்டும் என்பதற்கான இன்னொரு முக்கிய காரணம்.
அதேவேளை இங்கிலாந்து அணியின் புதிய கட்டமைப்பும் அவர்களும் புதிய தலைமையின் கீழ் ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடிய அணியாகவே தெரிகிறது.
ஆசிய பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடிய அணிகள் அல்ல.
அதிலும் உலகக்கிண்ணம் என்று வரும்போது உயிரைக்கொடுத்தும் விளையாடக்கூடியன.
அதில்வேறு, நடப்பு சம்பியனாக இந்தியா இருப்பதனால், தனது பட்டத்தை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள முனையும்.
பத்தாவது டெஸ்ட் அணியான பங்களாதேஷில் திறமையான வீரர்கள் சிலர் இருந்தும் அந்த அணியை காலிறுதிக்குக் கூடச் செல்லும் அணியாகக் கருதமுடியாது.
அதிலும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அயர்லாந்து அணியிடம் கண்ட தோல்வி பங்களாதேஷ் அணி பற்றிய எந்த ஒரு நம்பிக்கையையும் தருவதாக இல்லை.
இந்த 10 நாடுகளுடன் விளையாடும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத 4 அணிகளில், ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணி தவிர்ந்த ஏனைய மூன்று அணிகளுமே பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடிய ஆற்றலும், இப்போது அனுபவமும் கொண்டன.
2011 உலகக்கிண்ணத்திலேயே இங்கிலாந்தை தோல்வியடையச் செய்து உலகை ஆச்சரியப்படுத்திய அயர்லாந்து.
அசந்தால் எந்தப் பெரிய அணியையும் அசைத்து ஆடிவிடும் ஆப்கானிஸ்தான்.
அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சியைக் காட்டிவரும் ஸ்கொட்லாந்து.
நடந்த இரு பயிற்சிப் போட்டிகளிலும் ஸ்கொட்லாந்து அசத்தியது.
ஸ்கொட்லாந்தை விட பலமான அணியாகக் கருதப்படும் அயர்லாந்து அணியை வீழ்த்தியதோடு, மேற்கிந்தியத்தீவுகள் அணி பெற்ற 313 ஓட்டங்களையும் விடாமல் துரத்தி மூன்றே மூன்று ஓட்டங்களால் மட்டுமே தோற்றிருந்தது.
எனவே இரு பிரிவுகளையும் பார்த்தால், எனது கணிப்பில் இரண்டு போட்டிகளாவது நிச்சயமாக எதிர்பாராத அதிர்ச்சியான முடிவுகளைத் தரும் என நம்புகிறேன்.
பயிற்சிப் போட்டிகளில் எல்லா அணிகளுமே தங்களது வீரர்களைப் பரீட்சித்துப் பார்க்கவே விரும்பியிருக்கும் என்பதாலும், அதனால் வெற்றியை விட, உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான வியூகங்களையே அதிகமாகக் கருத்தில் கொண்டிருக்கும் என்பதாலும் அந்தப் பயிற்சிப் போட்டிகளின் முடிவுகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.
ஆனாலும், சிறிய அணிகள் தம்மை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக அந்தப் போட்டிகளைப் பயன்படுத்தியிருந்தன.
அதேபோல விளையாடிய வீரர்களில் தடுமாறியவர்களை வைத்து, அந்தந்த அணிகளின் பலவீனங்களையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
இந்த உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரையில் ஏதாவது அதிர்ச்சிகள் நிகழாதவிடத்தில், தரப்படுத்தலில் முதல் 8 இடங்களிலும் உள்ள நாடுகள் தடம் மாறாமல் காலிறுதிக்கு செல்லும்.
எனவே Associate Members என்று குறிப்பிடப்படும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளுக்கு தங்களை சர்வதேச மட்டத்தில் / உலகக்கிண்ண அளவில் தங்களை வெளிப்படுத்தும் இறுதிவாய்ப்பாகவும் இதுவே.
காரணம், அடுத்ததாக 2019இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் 10 நாடுகளாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் தரப்படுத்தலில் குறிப்பிட்ட ஒரு கால எல்லையில் முதலிடத்தில் உள்ள 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும்.
ஏனைய இரு டெஸ்ட் அணிகளும், அந்தஸ்தில்லாத அணிகளோடு மோதி அதிலிருந்து தான் தெரிவாகும் வழியுள்ளது.
எனவே பங்களாதேஷ்,சிம்பாப்வே ஏன் சிலவேளைகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கூட இது ஒரு இறுதி வாய்ப்பு தான்.
இலங்கையின் இரு பெரும் கிரிக்கெட் சிகரங்களான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகியோர் இந்த உலகக்கிண்ணத்தின் பின்னர் ஒய்வு பெறவுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இன்னும் பாகிஸ்தானின் ஷஹிட் அஃப்ரிடியும் உலகக்கிண்ணத்தின் பின்னர் ஒய்வு பெறுவதாக முன்னரே தெரிவித்திருந்தார்.
இவர்களைத் தவிர மைக்கேல் கிளார்க், மகேந்திர சிங் தோனி, மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், ப்ரட் ஹடின், டில்ஷான், ஹேரத் இன்னும் பலருக்கும் இது இறுதி உலகக்கிண்ணமாக அமையலாம்.
இன்னும் பல முன்னைய சாதனைகள் தகர்க்கப்படலாம்.
அதில் உலகக்கிண்ணத்தில் அதிக மொத்த ஓட்டங்கள், மொத்த விக்கெட்டுக்கள், ஒரு தொடரில் கூடிய ஓட்டங்கள், விக்கெட்டுக்கள் போன்றவை நிச்சயம் முறியடிக்கப்படா.
எனினும் விக்கெட் காப்பில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்த கில்கிறிஸ்ட்டின் (52) சாதனையை இம்முறை சங்கக்கார (46) முறியடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.
நியூ சீலாந்தின் சிறிய மைதானங்களில் இந்தியா – பேர்முடா அணிக்கேதிராகப் பெற்ற 413 ஓட்டங்கள் என்ற சாதனையை ஏதாவது ஒரு அணி முறியடிக்கும் என்று நம்ப இடமுண்டு.
உலகக்கிண்ணத்தை இதுவரை ஒரு தடவை தானும் வெல்லாத முக்கியமான அணிகள்…
இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து.
இதில் தென் ஆபிரிக்கா அல்லது நியூ சீலாந்து தங்களது முதலாவது உலகக்கிண்ணத்தை இம்முறை வெல்லக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பைக் கொண்டுள்ளன.
இதைப் பற்றித்தான் இப்படி சொல்லியிருந்தேன்…

உலகக்கிண்ணம் பற்றி எழுதும் நேரத்தில், அது பற்றி யோசிக்கையில் சரேலென மனதில் ஒரு எண்ணம் வந்தது…ஒரு அசரீரி மனதிலே சொன்ன மாதிரி.,. (விக்கிரமாதித்தனோ என்று கேட்டால் கெட்ட கோபம் வரும்)
1992 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது தான், தென் ஆபிரிக்க, நியூ சீலாந்து அணிகளுக்கு ‘சாபம்’ விழுந்தது.திறமையான அணிகளாக- கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் துரதிர்ஷ்டமாக அரையிறுதிகளோடு வெளியேறியிருந்தன.
இப்போது இந்த இரண்டு அணிகள் தான், ஏனைய எல்லா அணிகளையும் விட திடமான அணிகளாக, தொடர்ந்தும் பிரகாசித்துவரும் பலமான அணிகளாகத் தெரிகின்றன.தொடர்ந்து வெல்கின்றன.தலைவர்கள் ABD, McCullum & Run Machines Amla, Kane Williamson தொடர்ந்தும் ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனங்களாக விளங்கிவருகிறார்கள்.
எங்கே ‘சாபம்’ ஆரம்பித்ததோ, அங்கேயே முறிந்து, இதுவரை உலகக்கிண்ண இறுதியை எட்டிப் பார்க்காத இவ்விரு அணிகளும் இம்முறை மெல்பேர்னில் இறுதிப் போட்டியில் விளையாடுமோ?
வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

உலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்கும் நேரத்தில் வழமையாக நான் குறிப்பிடும் சில ஊகங்கள், அனுமானங்கள்….
ஜனவரி 24 நான் குறிப்பிட்ட காலிறுதிக்கான அணி வரிசைகள்..

https://www.facebook.com/arvloshan/posts/10155108225685368

‪#‎WorldCup‬ ‪#‎CWC15‬
Early prediction
Based on the current form and performances in Australia and New Zealand my prediction for Quarter Finals
Australia vs WI
NZ vs Pak
SL vs India
England vs SA
so every possibilities of a Aus vs SA Final.
இதே போல மூன்று முக்கியமான டெஸ்ட் விளையாடும் அணிகள் இம்முறை நிச்சயமாக உலகக்கிண்ணத்தை வெல்லாது என்று அடித்துச் சொல்லி வைக்கிறேன்.
இந்தியா
பாகிஸ்தான்
இங்கிலாந்து
இவற்றோடு மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகியவற்றை நீங்களும் கூட கணக்கில் கொள்ள மாட்டீர்கள் என எனக்கும் தெரியுமே…
இனி இரு பிரிவுகளிலும் உள்ள அணிகளை சுருக்கமாக அவற்றின் வாய்ப்புக்கள், முக்கிய வீரர்கள்,பலம், பலவீனங்களோடு பார்க்கலாம்.
பிரிவு A
அவுஸ்திரேலியா 
4 தடவை உலகக்கிண்ணம் வென்ற உலகத்தின் கிரிக்கெட் சக்கரவர்த்தி.
ஐந்தாவது கிண்ணத்தைக் குறிவைத்து நம்பிக்கையோடு களம் இறங்குகிறது.
சொந்த மைதானங்களும் மேலதிக சாதகத்தன்மையைத் தரும் நிலையில், உலகக்கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகப் பலரும் கருதுவது அவுஸ்திரேலியாவையே.
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு, என்று சகலதுறையிலும் மிகச் சிறந்த நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு முழு நிறைவான அணி.
ஒருநாள் போட்டிகளில் இப்போது தரப்படுத்தலில் முதலாமிடம்.
வோர்னர், பிஞ்ச், ஸ்மித், மக்ஸ்வெல் என்று எல்லோருமே துடுப்பாட்டத்தில் கலக்கி வருகிறார்கள்.
ஜோன்சன், ஸ்டார்க், புதியவர் ஹெசில்வூட் ஆகியோர் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சைக் கட்டமைத்துள்ளனர்.
சகலதுறை வீரர் மக்ஸ்வெல் எந்தவொரு போட்டியையும் சில ஓவர்களில் தனது துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது களத்தடுப்பினால்  மாற்றி, அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியாக மாற்றக்கூடியவர்.
ஆனால் காயமுற்றுள்ள போல்க்னர் இன் இன்மை அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயம் ஓரளவு பாதிப்புத் தான்.
தலைமைப் பிரச்சினை ஆரம்பத்தில் இருந்தாலும், இப்போது மைக்கேல் கிளார்க்கின் உபாதை குணமாகியிருப்பதால், அது சிக்கல் இல்லாமல் முடிந்திருக்கிறது.
கிளார்க் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட முடியாது என்பது  சிறிய தாக்கம் எனினும், கிளார்க் உள்ளே வர பெய்லி அணியை விட்டு நீக்கப்படுவார் என்பது ஒரு வித வேடிக்கை தான்.
4 தடவை சாம்பியனான அவுஸ்திரேலியா, இரு தடவை இறுதிப்போட்டியில் தோற்றும் இருக்கிறது.
சுழல்பந்து வீச்சும், சில நேரங்களில் சுழல்பந்து வீச்சுக்குத் தடுமாருவதுமே அவுஸ்திரேலியாவின் பலவீனங்களாகத் தெரிகிறது.
முதல் சுற்றுப்போட்டிகளில் நியூ சீலாந்துக்கு எதிரான ஒரே போட்டியைத் தவிர, எல்லாவற்றையும் சொந்த நகரங்களிலேயே விளையாடக்கூடிய வாய்ப்புடைய அவுஸ்திரேலியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாகவும், சில நேரம் அழுத்தமாகவும் இருக்கப்போகிறது.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – மக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித்.
உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
நியூ சீலாந்து 
6 தடவைகள் அரையிறுதி வந்தும், ஒரு தரம் தானும் இறுதிப்போட்டியை எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்டசாலி அணி.
இறுதியாக உலகக்கிண்ண இறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு 1992இல் இங்கேயே உலகக்கிண்ணம் நடைபெற்ற வேளையில் இருந்தது.
இறுதியாக இரண்டு தரமும் இலங்கையினாலேயே அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியிருந்தது.
இது தவிர இலங்கை அணியை உலகக்கிண்ணப் போட்டிகளில் கடைசியாக சந்தித்த 5 போட்டிகளிலும் தோல்வியையே கண்டுள்ளது.
இறுதியாக நியூ சீலாந்து வென்றது அதே 1992இல், இதே நியூ சீலாந்தில் வைத்து.
1992 மார்ட்டின் க்ரோ போலவே, இம்முறை மக்கலமின் தலைமையில் சிறந்த அணியொன்று நம்பிக்கையுடன் களம் காணுகிறது.
அவுஸ்திரேலிய அணியைப் போலவே சகலதுறைகளிலும் கலக்குகின்ற சிறந்த வீரர்களைக் கொண்ட பலமான அணியாகத் தெரிகிறது.
மக்கலம், கப்டில், வில்லியம்சன், டெய்லர், ரொங்கி என்று அனைவருமே தொடர்ச்சியாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவருகின்றனர்.
சௌதீ, போல்ட், மில்ன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும், வெட்டோரியின் அனுபவ சுழல்பந்துவீச்சும் சேர்ந்து, கூடவே கொரி அன்டர்சனின் மிதவேகப்பந்துவீச்சும் நியூ சீலாந்தை இன்னொரு மிகச் சிறந்த பந்துவீச்சு அணியாகக் காட்டுகிறது.
களத்தடுப்பும் உயர்தரத்தில் இருக்கும் ஒரு அணி.
வேகமாக ஓட்டங்களைக் குவிப்பதும், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறுவதும், நீண்ட துடுப்பாட்ட வரிசையும் நியூ சீலாந்தின் பலமாக இருக்கின்றன.
சுழல்பந்துவீச்சுக்கு சில நேரங்களில் தடுமாறுவதும், அழுத்தங்களுக்கு உட்படும் நேரம் எதிர்பாராத தோல்விகளும் நியூ சீலாந்தின் பலவீனம்.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – கேன் வில்லியம்சன், பிரெண்டன் மக்கலம்.
தங்கள் முதலாவது உலகக்கிண்ணத்தை இம்முறை வெல்லும் வாய்ப்புடைய அணியாகத் தெரிகிறது.
இலங்கை 
1996இல் கிண்ணம் வென்ற பிறகு கடைசி இரு தடவைகளும் இறுதியில் தோல்வி கண்ட அணி.
மஹேல, சங்கக்கார, டில்ஷான், ஹேரத், மாலிங்க, குலசெகரபோன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களோடு களம் காணும் இலங்கை அணி அரையிறுதி வரை தடையின்றி நடைபோடக்கூடிய அனியென்பதைஅண்மைக்காலத்தில் பலவீனமான பந்துவீச்சு ஐயப்படுத்துகிறது.
இன்னமும் அதிகமாக மூத்த வீரர்களில் தங்கியுள்ள துடுப்பாட்டம், டில்ஷான், சங்கக்கார ஆகியோரின் அண்மைக்கால சிறப்பான ஓட்டக்குவிப்பு மற்றும் கடந்த வருடம் முதல் ஓட்டங்களை அதிகளவில் பெற்றுவரும் தலைவர் அஞ்சேலோ மத்தியூசையுமே எதிர்பார்த்திருக்கிறது.
மாலிங்க, குலசேகர, ஹேரத் மற்றும் சச்சித்திர சேனநாயக்க ஆகிய நால்வரும் சிறப்பாகப் பந்துவீசினால், இலங்கையின் பந்துவீச்சும் சவாலானதாக விளங்கும்.
இலங்கையின் களத்தடுப்பு எப்போதும் சிறப்பாக இருப்பது ஒரு பலம்.
எகிறிக் குதிக்கும் பந்துகளையும் சமாளித்துவிடும் இலங்கை அணிக்கு, ஸ்விங் பந்துகள் சிக்கலைக் கொடுத்துவருகின்றன.
நியூ சீலாந்து ஆடுகளங்களும், இரு முனைகளிலும் பயன்படுத்தப்படும் வெள்ளைப்பந்துகளும் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை சிரமப்படுத்தும்.
அடுத்து இலங்கை அணியின் தடுமாறும் மத்திய வரிசைத் துடுப்பாட்டம்.
வேகமாக ஓட்டங்கள் குவிக்கப்படவேண்டிய slog overகளில் (35 -50) இலங்கை அணி மிகத் தடுமாறி விக்கெட்டுக்களையும் இழக்கிறது.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – அஞ்செலொ மத்தியூஸ், குமார் சங்கக்கார
அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேலே செல்வது இலங்கை அணியின் அதிவிசேட திறமை மற்றும் அணியின் ஒற்றுமையினால் மட்டுமே.
உலகக்கிண்ணம் வென்று மஹேல, சங்காவை சிறப்பாக வழியனுப்பி வைத்தால் இலங்கை ரசிகர்களுக்கு அதைவிட கொண்டாட்டம் வேறேது?
இங்கிலாந்து
1992க்குப் பின்னர் அரையிறுதி வரை எட்டிப்பார்க்காத ஒருநாள் போட்டிகளின் மிக மோசமான அணிகளில் ஒன்று.
1979, 87, 92 ஆகிய மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வியுற்ற துரதிர்ஷ்டசாலி அணி.
தலைவரை மாற்றி, வெற்றிபெறக்கூடிய வியூகங்களுடன் ஒருநாள் போட்டிகளுக்கான விசேடதத்துவ ஆற்றல் கொண்ட வீரர்களுடன் களம் காண்கிறது.
அண்மைக்கால தோல்விகள் தந்த பாடங்களுடன் சாதகமான களநிலைகள் அமைந்தால் எந்தப் பெரிய அணியையும் கவிழ்த்துவிடும் ஆச்சரியப்படுத்தக்கூடிய அணி.
இளைய துடுப்பாட்ட நட்சத்திரங்கள், மொயின் அலி, ஜோ ரூட், கரி பலன்ஸ், ஜேம்ஸ் டெய்லர், ஜோஸ் பட்லர் ஆகியோர் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளார்கள்.
ஒருநாள் போட்டிகள் என்றால் கலக்கும் தலைவர் ஒயின் மோர்கன், எனினும் இவரது அண்மைக்கால தடுமாற்றம் கொஞ்சம் கவலை தரும்.
கூடவே திடமான வேகப்பந்துவீச்சு வரிசை.
அண்டர்சன், வோக்ஸ். ப்ரோட்.
சுழல்பந்து வீச்சு தான் இங்கேயும் பலவீனமானதாகத் தெரிகிறது.
கூடவே உலகக்கிண்ணம் என்றாலே இறங்கிவிடும் இவர்களது சக்தி மட்டம்.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – மொயின் அலி, ஜேம்ஸ் டெய்லர்.
காலிறுதி உறுதி. அதற்கு மேல் இவர்களது முதற்சுற்று ஆட்டங்களில் ஆடும் விதம் தான் சொல்லும்.
பங்களாதேஷ்
ஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளாரக வந்த பிறகு எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை இருந்தது.
பெரிதாக எதுவும் மாறவில்லை.
ஷகிப் அல் ஹசன், மோர்ட்டசா, முஷ்பிகுர் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும், ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை போட்டியை வெல்லும் அணி.
சொந்த மைதானங்களும், சுழல் பந்துக்கு சாதகமான மைதானங்களும் இருந்தால் மட்டுமே வெல்லும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக தெரிகின்ற அணி.
அண்மைக்காலப் பெறுபேறுகளைப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்கொட்லாந்து கூட சிலவேளைகளில் இம்முறை பங்களாதேஷுக்கு ஆப்பு அடிக்கலாம்.
ஷகிப்பின் தனித்த சாதனைகளோடு இன்னும் சில வீரர்கள் பிரகாசித்தால் மட்டுமே பெரிய அணிகளுடன் போராட முடியும்.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – ஷகிப் அல் ஹசன், தஜியுள் இஸ்லாம்.
ஆப்கானிஸ்தான்
டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளில் கவனிக்கக் கூடிய அணியும் விரைவாக மேலெழுந்து வருகின்ற அணியாகவும் உள்ள அணி.
உலக T20 கிண்ண அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் இது முதலாவது உலகக்கிண்ணம்.
எந்தப்பெரிய அணியையும் கவிழ்த்துவிடும் ஆற்றல் கொண்டதும், இறுதிவரை போராடக்கூடியதாவும் காணப்படுகிறது.
அதிரடித் துடுப்பாட்டமும், ஆச்சரியப்படுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சும் இந்த அணியின் பலமாகத் தெரிகிறது.
நவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஸ்டனிஸ்கை, ஷென்வரி ஆகியோரோடு தலைவர் மொஹமட் நபி ஆகியோரின் துடுப்பாட்டமும், சட்றான் , ஹமீத் ஹசனின் துல்லியமான பந்துவீச்சும் பெரும்பலம்.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – சபூர் சட்ரான், அஸ்கர் ஸ்டனிஸ்கை
ஸ்கொட்லாந்து
கவனிக்கப்படாமல் இருந்த இந்த அணியின் அண்மைக்கால வளர்ச்சி ஆச்சரியப்படவைக்கிறது.
தலைவராக மொம்சன் வந்த பிறகு இந்த அணி பெரிய அணிகளையும் வீழ்த்தும் ஆற்றல் பெற்றதாகத் தெரிகிறது.
இங்கிலாந்தில் விளையாடிப் பழகிய அனுபவம், நியூ சீலாந்து, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் கை கொடுக்கும் போல தேர்கிறது.
தங்களது மூன்றாவது உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடும் ஸ்கொட்லாந்து, இதுவரை 8 உலகக்கிண்ணப் போட்டியிலும் தோற்றிருக்கிறது.
இம்முறை எப்படியாவது தங்களது முதலாவது வெற்றியைப் பெறவேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறது.
அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம் இவர்களது பலம்.
தலைவர் மொம்சன், மக்லியொட், பெரிங்க்டன், மட் மச்சான், கைல் கொட்சர் என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் தெரிகிறார்கள்.
பந்துவீச்சும் முன்னரை விட முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆச்சரியம் கொடுக்கும் அணிகளில் ஒன்றாகக் குறித்து வைக்கலாம்.
கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் – கொட்சர், பெரிங்க்டன்
SHARE