இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கும் உதவுகிறது. அதேசமயம், தங்கள் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு இந்தியா மீது குற்றம்சாட்டுகிறது.
சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே டெல்லியில் நடைபெற இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, பாகிஸ்தானின் பிடிவாத போக்கின் காரணமாக ரத்து ஆனது.
இந்த மாதம் இறுதியில் நியூயார்க்கில் ஐ.நா.சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது அங்கு இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேசும் வாய்ப்பு இருக்கிறதா? என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் காஜி எம்.கலியுல்லாவிடம் நிருபர்கள் கேட்ட போது, அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்று பதில் அளித்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், நேற்று கராச்சி நகரில் நிருபர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கான ஆதாரங்களை ஐ.நா.சபையிடம் வழங்குவோம் என்றார். அத்துடன் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய தரப்பில் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாகவும் அவர் அபாண்டமாக குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளின் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் பேட்டியின் போது சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.