புத்தளம் வான் வீதி எப்போதும் பிசியாகவே காணப்படும். கடந்த 09ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் வான்வீதி வழமையை விடவும் கொஞ்சம் பிசியாகவே காணப்பட்டது. புத்தளம் வான்வீதியிலுள்ள ஹனீபா முஹம்மது ஹாதிம் எனும் நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளமையே வான்வீதி பிசியானமைக்கு காரணமாகும்.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி. தந்தை உப்புவாய்க்காலுக்கு வேலைக்காக சென்றுள்ளமையினால், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவனை வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று மிளகு வாங்கி வருமாறு சிறுவனின் தாய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
கடைக்குச் சென்ற தனது மகன் 40 நிமிடங்களுக்கும் மேலாகியும் வீடு திரும்பவில்லை என்பதை உணர்ந்துகொண்ட சிறுவனின் தாய், உறவினர்கள், அயலவர்களின் உதவியுடன் அங்கும், இங்குமாக மகனை தேட ஆரம்பித்தாள்.
ஆனால், குறித்த சிறுவன் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதுதான் எல்லோரினதும் பதிலாகவே கிடைத்தது. பின்னர்தான் குறித்த சிறுவனை அதே தெருவில் வாடகைக்கு வசித்து வரும் மனோகரி எனும் பெண்ணொருவர் அழைத்துச் செல்வதை தாங்கள் கண்டதாக ஒருசிலர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
பின்னர் குறித்த பெண் தங்கியிருக்கும் வாடகை வீட்டுக்குச் சென்று பார்த்த போது அந்த வீடு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடைக்குச் சென்ற சிறுனைக் காணவில்லை என்ற பதிவு உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன், புத்தளம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
வான்வீதியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடததப்பட்டமை வான்வீதி தெருவை மாத்திரமல்ல புத்தளம் மக்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
குறித்த சிறுவனைத் தேடும் முயற்சியில் புத்தளம் பொலிஸாரும், ஊரிலுள்ள சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
கடத்தலுக்கான பின்னணி
குறித்த சிறுவனைக் கடத்திச் சென்றார் என்று குற்றஞ்சாட்டப்படும் தமிழ்ப் பெண்ணான மனோகரி கடந்த 2004ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண் வேலை செய்த அதே இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த அலாவுதீன் என்பவர் மேற்பார்வையாளராகக் கடமையாற்றிவந்துள்ளார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தமையினால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர். தான் ஒரு இந்தியப் பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட குறித்த மனோகரி சில காலங்களின் பின்னர் உண்மையில் இலங்கையைச் சேர்ந்தவள் என்பதை அலாவுதீன் புரிந்துகொண்டார்.
எனினும், இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளமையினாலும் மொழியில் ஒன்றுபட்டுள்ளமையினாலும் அலாவுதீன் தனது காதலை தொடர்ந்தார்.
கடந்த பத்து வருடங்களாக காதலர்களாக இருந்த இருவரும் திருமணம் முடிப்பதென்று முடிவெடுத்து 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவ்வாறு இந்தியாவுக்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்ற அலாவுதீன், அந்தப் பெண்ணை புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு எடுத்து திருமணமும் முடித்துள்ளார். இவ்வாறு திருமணம் முடித்துவிட்டு சிறிது காலம் இந்தியாவில் வாழ்ந்த இருவரும் மனோகரியின் தாய் நாடான இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கைக்கு வந்த மனோகரி தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலும் சிறிது காலம் தங்கியிருந்த இந்தியரான அலாவுதீன் தொழில் நிமித்தம் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறு வெளிநாடு சென்றுள்ள இந்தியர் அலாவுதீன் இலங்கையில் வாழும் தனது மனைவிக்கு மாதாந்தம் 500 ரியால்களை செலவுக்காக அனுப்பி வந்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில், சில மாதங்களின் பின்னர், தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இந்திய கணவர் அலாவுதீனுக்கு தெரியப்படுத்திய மனோகரி, மாதாந்த செலவுக்கு கொடுக்கப்படும் 500 ரியால்களுக்கு மேலதிகமாக மருத்துவ தேவைகளுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து 10 மாதங்களின் பின்னர், தனக்கு இரட்டைக் குழந்தை கிடைத்துள்ளதாக தனது இந்தியக் கணவரான அலாவுதீனுக்கு அறிவித்துள்ள மனோகரி, இரு குழந்தைகளின் புகைப்படங்களையும் அனுப்பியும் வைத்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணுக்கு ஒரு குழந்தை கூட கிடைத்திருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. தான் கர்ப்பம் தரித்துள்ளதாகவும், பின்னர் குழந்தை பிறந்துள்ளதாகவும் சொல்லி அலாவுதீனிடமிருந்து அதிகமான பணத்தை பெற்றுக்கொள்ளவே குறித்த பெண் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளத்தில் வாழும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக அதிக பணத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தொழில்புரிந்து வரும் அலாவுதீன் இரட்டைக்குழந்தைகளை பார்ப்பதற்காக விடுமுறையில் இலங்கை வருகை தரவுள்ளதாக தனது மனைவியான மனோகரியிடம் கூறியுள்ளார்.
இவருடைய இலங்கை வருகை அறிவிப்பானது மனோகரிக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளதுடன் பிரச்சினையும் ஆரம்பித்துள்ளது. உண்மையில், குழந்தையில்லாத குறித்த பெண் விடுமுறையில் இலங்கை வரும் இந்தியக் கணவரான அலாவுதீனுக்கு எப்படியாவது இரண்டு குழந்தைகளை காட்டியே ஆக வேண்டும் என சிந்தித்த குறித்த பெண், தனது உறவினர்களிடம் இருக்கும் சிறிய குழந்தைகள் இருவரைக் கேட்டுள்ளார். ஆனால் உறவினரோ மனோகரிக்கு குழந்தைகளை கொடுப்பதற்கு விருப்பத்தைத் தெரிவிக்கவில்லையாம்.
பின்னர், எப்படியாவது விலைக்காவது இரண்டு குழந்தைகளை வாங்கிக் கொள்வோம் என்று முடிவெடுத்துள்ள மனோகரி புத்தளம் நகரம், மணல்குன்று ஆகிய பகுதிகளிலும் சிறுகுழந்தை தத்தெடுக்க வேண்டும். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று விசாரித்துள்ளார்.
அத்துடன், ஒரு இருவாரங்களுக்காவது ஒரு பிள்ளையை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து தருமாறும் குறித்த பெண் பலரிடம் கேட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த நான்கு வயது சிறுவனைக் கடத்திச் செல்லும் முன்னர் கடந்த வாரம் புத்தளம் நகரில் இன்னுமொரு குழந்தையை கடத்தும் நோக்கில் மனோகரி அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தை காணாமல் போனதும் பெற்றோர்கள், குடும்ப உறவினர்கள், ஊர்மக்கள் திரண்டு குழந்தையை தேடும் போது குறித்த குழந்தையை மனோகரி அழைத்துச் செல்லும் வழியில் கண்டுள்ளனர். பின்னர் குழந்தையை எங்கு அழை;துச் செல்கிறீர்கள் என தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மனோகரியிடம் கேட்க இந்தக்குழந்தை யாருடையது என்பது எனக்குத் தெரியாது.
வீதியில் நின்றுகொண்டிருந்தது. எனவே, அருகிலுள்ள பள்ளியில் இந்தக் குழந்தையை ஒப்படைக்கவே அழைத்துச் செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மனோகரியின் இந்த செயற்பாட்டினால் ஊர் மக்கள் சந்தேகப்படவில்லை. சந்தோஷப்பட்டனர். மனோகரியைப் பாராட்டினர். ஆனால் உண்மை அதுவல்ல என்றும் அன்றைய தினம் குறித்த பெண் அந்தக் குழநந்தையை கடத்தவே அழைத்துச் சென்றதாகவும், அது கைகூடவில்லை. தனது கடத்தல் முயற்சி பிழைத்துவிட்டதும்; வீதியில் அநாதரவாக நின்ற குழந்தையை பள்ளியில் ஒப்படைக்க அழைத்துச் செல்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
மனோகரி தனது தங்கையுடன் வான்வீதியில் பத்து வருடங்களுக்கு மேலாக இருப்பதனால், புத்தளத்திலுள்ளவர்களுடன் பழகுவதால் மனோகரியின் நடத்தையை யாரும் சந்தேகம் கொள்ளவில்லை என்பதுதான் உண்மையாகும்.
இதற்கிடையில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தொழில்புரிந்து வரும் அலாவுதீன் விடுமுறையில் தனது சொந்த ஊரான இந்தியாவுக்குச் சென்றுவிட்டு இலங்கையில் வாழும் தனது மனைவி மற்றும் இரட்டைக்குழந்தைகளை பார்ப்பதற்காக மிகவும் ஆவலுடன் கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தனது இந்தியக் கணவன் இலங்கை வந்துள்ளதும், எப்படியாவது ஒரு குழந்தையையாவது உங்கள் குழந்தையென்று காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே குறித்த சிறுவனைக் கடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கடந்த 7,8 ஆகிய இரு தினங்கள் இரண்டாவதாக கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனின் வீட்டுக்குச் சென்று அங்கு அந்தச் சிறுவன், உறவினர்களுடன் நீண்ட நேரத்தை கழித்துள்ளாராம். குறித்த பெண் அப்போதே குறித்த சிறுவனைக் கடத்தும் திட்டத்தையும் தீட்டியுமுள்ளார்.
சிறுவனைக் கடத்துவதற்கு முன்னர், சிறுவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், நெருக்கத்தை ஏற்படுத்தவும் முதல் இரண்டு நாட்கள் குறித்த பெண் சிறுவனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் இலங்கைக்கு வந்துள்ள இரண்டு நாட்களும் தனது இரட்டைக் குழந்தைகளை காட்டுமாறு இந்திய கணவரான அலாவுதீன், தனது மனைவியிடம் கேட்டுத் தொந்தரவு கொடுத்துள்ளார்.
எனினும் குழந்தையொன்றிற்கு இருதய வருத்தம் இருப்பதால் குழந்தையை இப்போது பார்க்க முடியாது என மனைவியான மனோகரி மறுத்திருக்கிறாராம்.
ஒரு குழந்தைக்கு சுகயீனம் என்றாலும் மற்றைய குழந்தையையாவது தன்னிடம் காட்டுமாறு அலாவுதீன் மனைவியிடம் கேட்டுள்ளார். நான்கு நாள் விடுமுறையில் இலங்கைக்கு வந்துள்ள அலாவுதீன் தனது குழந்தைகளை பார்ப்பதில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருந்தார். எனினும் மனோகரி குழந்தையை காட்டாது பொய்க்கு மேல் பொய் சொல்லி சமாளித்துக் கொண்டிருப்பதால் ஆவேசம் கொண்ட அலாவுதீன் அவர், மனைவியிடம் சண்டையிட ஆரம்பித்துள்ளார்.
இதன்பின்னர் புத்தளம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு தனது கணவரை அழைத்துச் சென்ற மனோகரி, கணவனை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு வைத்தியரை தனிமையில் சந்தித்துள்ளார். ஒருவரை அழைத்து வந்துள்ளேன். அவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வைத்தியசாலையில் இருக்கும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார். ஆனால் அந்த குழந்தையை காட்ட வேண்டாம் என வைத்தியர் ஒருவர் கூறியிருக்கிறார். எனவே, நீங்களும் இவ்வாறு குழந்தையை பார்க்க வேண்டாம் என்று அவரிடம் சொல்லுமாறு குறித்த பெண் வைத்தியரிடம் தெரிவித்துள்ளார்.
சரி எனக்கூறிய வைத்தியர் அவரை அழைத்து வருமாறு கூற, குறித்த பெண்ணும் தனது கணவரான அலாவுதீனை அழைத்து உள்ளே சென்றுள்ளாள்.
வைத்தியரைப் பார்வையிடுவதற்காக உள்ளே வந்த அலாவுதீன் வைத்தியரைப் பார்த்ததும் ஸலாத்தைக் கூறியிருக்கிறார். அப்போது இருவரும் கணவன், மனைவி என்பது வைத்தியருக்குத் தெரியாது. அழைத்து வந்த பெண் பொட்டு வைத்துள்ளார். ஆனால் அழைத்து வரப்பட்டவர் ஸலாம் கூறுகிறார்.
இதில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட வைத்தியர் அலாவுதீனிடம் பேச ஆரம்பித்ததும், இருவருக்கும் இடையே வைத்தியருக்கு முன்னே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் நடந்த உண்மைகளையும், குறித்த பெண் தனது மனைவி என்றும் அவர் தன்னை ஏமாற்றியுள்ளதாகவும், அதனால் தான் மனம் உடைந்து போயுள்ளதாகவும் அலாவுதீன் வைத்தியரிடம் கூறியுள்ளார். எனினும் குறித்த வைத்தியர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து இரட்டைக்குழந்தையில் ஒரு குழந்தையை காண்பிப்பதாகக் கூறிய மனோகரி வெள்ளிக்கிழமை குழந்தையை காட்டுவதாகவும் அலாவுதீனிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவன் கடத்தல்
இப்படியிருக்கையில்தான் கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைக்குச் சென்ற குறித்த சிறுவனை மனோகரி அழைத்துச் சென்று தனது தங்கையிடம் ஒப்படைத்த மனோகரி புத்தளம் வண்ணாத்தவில்லு பகுதியிலுள்ள அக்காவின் வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு கூறியிருக்கிறார்.
இதன்படி கடத்தப்பட்ட சிறுவனை புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேசத்திலுள்ள அக்காவின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மனோகரியும், அலாவுதீனும் முச்சக்கர வண்டியில் வண்ணாத்தவில்லு பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் சிறுவன் காணாமல் போயுள்ளமை புத்தளம் பிரதேசத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டம் வரை தீயாகப் பரவியுள்ளது.
புத்தளம் பொலிஸார், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஊர்மக்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் சிறுவனை அழைத்துச் சென்ற பெண் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் வரை தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், குறித்த சிறுவனுக்கு உணவு, பானம் வழங்கி எப்படி பேசுவது என்றும் பயிற்சிகளும் வழங்கியுள்ளனர். வண்ணாத்தவில்லு பிரதேசத்திற்கு தனது கணவருடன் சென்ற மனோகரி, அங்கிருந்த சிறுவனைக் காண்பித்து இதுதான் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை எனக் கூறியுள்ளாராம்.
இந்திய கணவரான அலாவுதீனும் தனது பிள்ளையிடம் அளவளாவிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது “அப்பா”என்று சொல்லுமாறு மனோகரியும், மனோகரியின் தங்கையும் சிறுவனிடம் கூறியுள்ளனர்.
அடிக்கடி “அப்பா”என்று சொல்லிக்கொண்டிருந்த சிறுவன் இடைநடுவில் “வாப்பா, உம்மா” என்று சொல்லியிருக்கிறான். இதனையடுத்து குறித்த சிறுவன் மீது சந்தேகம் கொண்ட அலாவுதீன் சிறுவனிடம் உனது வாப்பா, உம்மாவின் பெயர் என்ன என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிறுவன் தனது உண்மையான வாப்பா, உம்மாவின் பெயரைச் சொல்லவே அங்கு இந்தியக் கணவரான அலாவுதீனுக்கும், மனோகரிக்கும் பெரும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு சிறுவனை அலாவுதீனுடன் வைத்துவிட்டு, வண்ணாத்தவில்லு பிரதேசத்திலிருந்து புத்தளம் நகருக்கு வந்த மனோகரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனோகரி கைது செய்யப்பட்டு ஒரு மணிநேரத்தின் பின்னர் மனோகரியின் தங்கையும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு பெண்களும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கிடையில், சனிக்கிழமை அதிகாலை 4மணிக்கு இந்தியாவுக்குச் செல்லவிருந்த அலாவுதீன் தன் வசம் இருக்கும் சிறுவனை உரிய இடத்தில் ஒப்படைத்துவிட்டு விமான நிலையம் செல்லவே வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டியில் சிறுவனை அழைத்துக்கொண்டு புத்தளம் நகருக்கு வந்துள்ளார்.
புத்தளம் நகருக்கு வந்த குறித்த இந்தியர், சிறுவனின் வீட்டைத் தேடி வந்த போது சிறுவனின் வீட்டில் கூடியிருந்த பொதுமக்களினால் இந்தியரான அலாவுதீனும், முச்சக்கர வண்டி சாரதியும் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்தியர் உட்பட நான்கு பேரில் முச்சக்கர வண்டி சாரதி அன்றைய தினமே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஏனைய மூவர் புத்தளம் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறுவனைக் கடத்தியதாகக் கூறப்படும் குறித்த பெண் கடந்த புதன் கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எனவே, கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான குடும்ப பிரச்சினையே இக்கடத்தலுக்கு காரணமாக அமைந்துள்ளமை மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தெளிவாக புலப்படுகிறது. எப்படியாவது இலங்கை வந்துள்ள தனது கணவரான இந்தியர் அலாவுதீனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே குறித்த பெண் இவ்வாறு முயன்றுள்ளார்.
குறித்த சிறுவன் கடத்தப்படுவதற்கு முன்னரே கணவன், மனைவிக்கிடையே குழந்தை விடயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அவர்கள் சென்ற வைத்தியர் ஆதாரமாக இருக்கிறார்.
அத்துடன், சிறுவன் விடயத்தில் இந்தியர் அலாவுதீன் நடந்துகொண்ட விடயமும் அவர் இந்தக் கடத்தலுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தாரா என்பதை அனுமானிப்பதற்கு அவ்வளவு நேரம் தேவையில்லை.
உண்மையில் சிறுவனின் கடத்தலுடன் இந்தியர் அலாவுதீன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் ஏன் வீடு தேடி வரவேண்டும்.
மறுநாள் அதிகாலை 4மணிக்கு அவருக்கு இந்தியா செல்ல விமான டிக்கட் கையிலுள்ளது. ஆக, கடத்தலுடன் தொடர்புபட்டிருந்தால் அவர் அந்த சிறுவனை மனோகரியின் அக்கா வீட்டிலேயே விட்டுவிட்டு நேரடியாகவே விமான நிலையத்திற்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் இவ்வளவு பாரதூரமான வியடமாகும் என்பதை நினைத்திருக்கவில்லை என்பதையே அனுமானிக்க முடிகிறது.
தன்னிடமுள்ள சிறுவனை குறித்த பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு இந்தியா செல்லப் போவதாகவே மனோகரியின் அக்கா குடும்பத்தாரிடம் கூறியே இந்தியர் அலாவுதீன் புத்தளத்திற்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படியிருப்பினும், இந்தியக் கணவரிடம் இரண்டரை வருடங்களாக கூறிவந்த ஒரு பொய்யை மறைப்பதற்கும், இலங்கை வந்துள்ள அலாவுதீனை சமாளிப்பதற்குமே மனோகரி மற்றும் மனோகரியின் தங்கையினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாடகமே சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் என்பது வெளிப்படையாகவே தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது
இதற்காக குறித்த பெண் மனோகரி நன்கு திட்டமிட்டு செயற்பட்டுள்ளமையும் கிடைக்கின்ற தகவல்களை வைத்து பார்க்கின்ற போது அவதானிக்க முடிகிறது.
– ரஸீன் ரஸ்மி –