உலகெங்கிலும் நிலவும் காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பலவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.பருவகாலம் தப்பிய மழை, அதிகரித்த வெப்பநிலை என்பவை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழப்புக்களும் பதிவாகியவண்ணமுள்ளன.மேற்கத்தேய நாடுகளில் குறிப்பாக நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவி வருகின்றது.
இந்நிலையில், கனடாவின் ரொரண்ரோ மாகாணம் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள தென் பிராந்தியங்களில் அதிவெப்ப எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கையினை பிறப்பித்துள்ள கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், இன்று திங்கட்கிழமை பகல் வேளைகளில் வெப்பநிலை 30 பாகை செல்சியசை தொடும் எனவும், ஈரப்பதத்துடன் சேர்ந்து அது 40 பாகையாக உணரப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இரவு வேளைகளில் வெப்பநிலை சுமார் 20 பாகை செல்சியசாக காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான அதிகூடிய வெப்பநிலை எவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரித்துள்ள அதிகாரிகள், குறிப்பாக சிறுவர்கள், வயதான முதியவர்கள், சுவாசக் கோளாறுகள் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் அதிக அளவிலான பாதிப்பினை எதிர்நோக்க கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான வேளைகளில் நீரிழப்பினை தவிர்க்கும் வகையில் தாகம் எடுப்பதற்கு முன்னரே அதிக அளவிலான நீர் உள்ளிட்ட பானங்களை அருந்துமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.