பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்தபோது அளவுக்கு அதிகமான குடிபோதையில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள லீய்செஸ்டர் நகரை சேர்ந்த ஜஸ்பிர் சிங் பாரஜ்(46) என்ற நபர் துபாய் நகரில் எமிரேட்ஸ் விமானத்தில் பிரிதானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
விமான இருக்கையில் இருந்தபோது, பணிப்பெண்ணை அடிக்கடி அழைத்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறியதும், எந்த தவறும் செய்யாத பணிப்பெண்ணை அவதூறான வார்த்தைகளால் சாடியுள்ளார். மேலும், பாலியல் ரீதியாகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய அந்த நபர், விமானத்தில் இருந்த சில பொருட்களையும் போட்டு உடைத்துள்ளார். விமான குழுவினர் எவ்வளவோ போராடியும் நபரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உண்டான பணிப்பெண்கள் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர். விமானம் Birmingham விமான நிலையத்தை அடைந்தவுடன் பொலிசார் விரைந்து வந்து தகராறு செய்த நபரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளனர். காரிலும் அடாவடித்தனம் செய்த அந்த நபர், ஒரு பொலிசாரின் கையை பிடித்து கடித்ததாக கூறப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி இந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. விமானத்தில் அத்துமீறி செயல்பட்ட காரணத்தால், பணிப்பெண்களுக்கு அவமானமும், விமான நிறுவனத்திற்கு 2,643 பவுண்ட் இழப்பீடும் ஏற்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்வதுடன் அவருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
|