சமூகமேம்பாட்டு அமைப்பின் அமுலாக்கலில் இரண்டு முன்பள்ளிகளின் திறப்பும் அவற்றின் கையேற்பு நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
கொக்குத்தொடுவாய் மத்தியில் பால்நிலவு முன்பள்ளியும் கொக்குத்தொடுவாய் தெற்குப்பகுதியில் திரேசம்மா முன்பள்ளியும் 2016-04-01ஆம் நாளாகிய இன்று பிற்பகல் நான்கு மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பாக்கியம் அறக்கட்டளையைச்சேர்ந்த நிருவாகிகள் இரண்டு முன்பள்ளி ஆசிரியர்க்கும் ஈருருளிகளை வழங்கியதோடு அவர்கட்கான மாதாந்த கொடுப்பனவுத்தொகையாக இரண்டாயிரம் உரூபாயை வழங்கவும் முன்வந்துள்ளனர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய ரவிகரன் அவர்கள்,
மண்டியிடாத மண் எங்கள் மணலாறு.
மாகாணமட்டத்தில் அண்மைய கல்விவளர்ச்சிகூட மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. கல்வியால் தான் எமது சமூகத்தை கட்டியெழுப்பவேண்டும். அதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. கல்விக்கான எனது பங்களிப்புகள் தொடரும் என்று கூறியதோடு இம்முன்னெடுப்பினை செயற்படுத்திய பாக்கியம் அறக்கட்டளையின் சேவையையும் பாராட்டினார்.
குறித்த நிகழ்வில், பாக்கியம் அறக்கட்டளை பிரமுகர்கள், சமூக மேம்பாட்டு அமைப்பின் பிரதேசத்தலைவர் திரு. சாம், பொருளாளர் திருமதி வ.ஜெயநிலா, முன்பள்ளி ஆசிரியைகள், கிராம அபிவிருத்திச்சங்க மாதர் கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், கமக்கார அமைப்பு, மீனவர்சங்கப்பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.