சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாகீர் கானுக்கு சச்சின், டோனி உள்ளிட்டோர் வாழ்த்து

306

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு சச்சின், டோனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான். தொடர்ந்து காயத்தில் சிக்கித் தவித்த அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.

இந்நிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜாகீர்கான் மும்பையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜாகீர்கானுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகர், செயலாளர் அனுராக் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர்களான டோனி, ரெய்னா, கோஹ்லி, ஹர்பஜன், ரோஹித் சர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னாள் வீரர்களும் புகழாரம் சூட்டியதுடன், அவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணித்தலைவர் டோனி தனது டுவிட்டர் பக்கத்தில், “என்னை பொறுத்த வரை, புத்திசாலித்தனமான ஒரு பந்துவீச்சாளர் ஜாகீர்கான். அவர் இல்லாவிட்டால் பல சாதனைகளை இந்திய அணி எட்டியிருப்பது கடினம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில், ”எனக்கு தெரிந்தவரையில் ஜாகீர்கான் மிகவும் நிதானமான வேகப்பந்து வீச்சாளர். எல்லா நேரங்களிலும் கூர்மையாக சிந்தித்து செயல்படக்கூடியவர். அவருடைய ஓய்வு வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்”என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE