சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மன்னாரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட, சிவகரன், இந்த சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு, உதவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், முன்னிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சிவகரன் ஒரு ஆண்டுக்கு நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சிவகரனை அரசதரப்பு சாட்சியாக முன்னிறுத்துவதா என்பதை சட்டமா அதிபர் திணைக்களமே முடிவு செய்யும் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான ராம், நகுலன், கலையரசன் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மன்னாரில். கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட, சிவகரன், தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் இருப்பவர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலில் கட்சியின் முடிவுக்கு மாறாக செயற்பட்டதற்காக, சிவகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை என்றும், சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.