சென்னை போட்டியே சிறந்த வெற்றி.. வாய்ப்பை கோட்டை விட்டு விட்டோம்: டோனி, டிவில்லியர்ஸ் கருத்து

313

சென்னையில் நடந்த 4வது ஒருநாள் போட்டி பற்றி தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய தலைவர்களான டிவில்லியர்ஸ், டோனி கருத்து தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இது தொடர்பான இரு அணி தலைவர்களின் பேட்டி:-

டோனி:-

“தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தான் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்தும் சிறப்பாக அமைந்தது. துடுப்பாட்ட வீரர்கள் நன்றாக நிலைத்து நின்று ஆடினார்கள்.

சுரேஷ் ரெய்னா அதன் காரணமாக பெரிய ஷாட்டுகளை ஆட முடிந்தது. அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டங்களை குவித்தனர். இது கடைசி போட்டியில் கண்டிப்பாக கைகொடுக்கும்.

விராட் கோஹ்லியின் ஆட்டம் அருமையாக இருந்தது. குறிப்பாக 35 ஓவர்களுக்கு பிறகு அற்புதமாக அமைந்தது.

மேலும், வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்களிப்பை அளித்தனர்.”

டிவில்லியர்ஸ்:-

“இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் கோட்டைவிட்டு விட்டோம்.

இந்த ஆடுகளத்தில் விளையாட சற்று கடினமாக இருந்தது. ஆனால் கோஹ்லி சூழ்நிலையை விரைவில் உணர்ந்து விளையாடினார்.

வெற்றி – தோல்வியை நாணய சுழற்சி நிர்ணயிப்பதில்லை. இது கடினமான போட்டியாக இருந்தது. கடைசி வரை வெற்றிக்காக போராட வேண்டும் என்றே விரும்புகிறேன்”

இந்த ஒருநாள் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி வருகிற 25ம் திகதி மும்பையில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.

SHARE