சொந்த மண்ணில் பழி தீர்த்த வங்கதேசம்: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி

343
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் துடுப்பாட்ட போட்டி மிர்புரில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த வங்க தேச அணியினர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

இந்நிலையில் வங்க தேசம் அணி 15.4 ஓவரில் 119 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

தமீம் இக்பால் 57 ஓட்டங்களுடனும், தாஸ் 3 ஓட்டங்களுடனும், களத்தில் இருந்தனர். பின்னர் மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக ஆடிய வங்க தேசம் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கினர்.

நிதானமாக ஆடிய தவான் 16-வது ஓவரில் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கோலி 1 ஓட்டம் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த ரகானே 25 பந்துகளில் 9 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இதனால் இந்திய அணி ஓட்டங்கள் குவிக்க முடியாமல் தத்தளித்தது. பின்னர் களமிறங்கிய தோனி, ரெய்னா ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்தது. தோனி 5 ஓட்டங்களுடன் வெளியேற ரெய்னா நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.

இந்நிலையில் ரெய்னாவும் பின்னர் வந்த ஜடேஜாவும் ஆட்டமிழந்ததால். இந்திய அணியில் தோல்வி உறுதியானது.

இறுதியில் 46 ஓவர்கள் முடிவில் 228 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது.

இதையடுத்து வங்க தேச அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் முஸ்த்தஃபிசூர் ரஹ்மான் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

SHARE