ஜனாதிபதித் தேர்தலில் 78 முதல் 82 வீதமான தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகணகமகே தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – நான் கற்ற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் மாணவர்களுமாக இணைந்து அண்மையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது 90 முதல் 92 வீதமான வடக்கு – கிழக்கை சேர்ந்த தமிழர்கள் இம்முறை வாக்களிப்பார்கள். அதில் 78 முதல் 82 வீதமானவர்கள் மைத்திரிபாலவுக்கே வாக்களிப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவும் தற்போதைய அரசாங்கத்தின் திருகுதாளங்களாலும் நடைபெறும் தேர்தல் சுதந்திரமானதாக இடம்பெறுமா என்பது கேள்வியாகவே உள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியமாக உள்ளனர். இந்த நாட்டில் பொலிஸாலோ, அரசாங்கத்தாலோ வேறு எவராவலுமோ எமக்கு பாதுகாப்பு இல்லை. எமக்கு ஊடகமொன்றே பாதுகாப்பானது. இதனை சொல்ல நான் தயார்.
இதனால் வரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் தயார். சிறையில் அடைத்தால் அடைக்கட்டும். அதிலும் மனிதர்கள் தானே இருக்க வேண்டும். சிறைகளை கட்டி விட்டு நாய்கள் இருக்க முடியாது. யுத்தம் முடிந்த பின்னர் நாடு பல அபிவிருத்திகளை கண்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நாடு மிக மோசமாகச் சென்று விட்டது. மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி, நீதித்துறை, கலாசாரம், ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வேண்டும். ஆனால் இன்று அது இல்லை. தற்போது 3ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை சந்தித்து நீங்கள் இத்தேர்தலில் வாக்களிக்காது விட்டால் சிறப்பானது எனவும் அவ்வாறு செய்தால் சம்பளம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் சமுர்த்தி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் பொருள்கள் வழங்குவதற்கு பெயர்கள் கோரப்பட்டு இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்காது விட்டால் அவர்களுக்கு பொருள்கள் வழங்குவதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. அத்துடன் கிளிநொச்சியில் உள்ள பண்ணையில் 6ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களை அரசாங்க கட்சிகளை தவிர வேறு எவரும் சென்று சந்தித்து கலந்துரையாட முடியாத வகையில் பாதுகாப்பு போடப்படடுள்ளது. எனவே இவர்களையும் வாக்களிக்க விடாது செய்வார்கள். யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவார்கள். அண்மையில் காணி வழங்குவதாக மக்களுக்கு ஜனாதிபதி கடிதமொன்றையே வழங்கினார். இந்தத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்காது விட்டால் அவர்களுக்கு உறுதி தரப்படும் என பிரசாரம் செய்யப்படுகின்றது.
இதன் மூலமாக இந்த அரசாங்கம் 3 லட்சம் வாக்குகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செய்து தாம் வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் இத்தடைகளை தாண்டி மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியானது இலங்கை மக்களுக்கான இன, மத, மொழிகளை கடந்த கட்சி. இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு குடும்பமே உள்ளது. அது ராஜபக்ஷ குடும்பம். ஆனால் மைத்திரிபாலவுக்கு பல குடும்பங்கள் பலமாக உள்ளன. இன்று ஹெல உறுமய அரசை விட்டு வெளியில் வந்து விட்டதால் இனி அவர்களும் புலி என சொல்வார்கள்.
தற்போதைய அரசாங்கம் எதனையும் சொல்லட்டும் ஆனால் மைத்திரியே வெற்றி பொறுவார். ஏனெனில் அவர் ஊழல் அற்றவர். அவரிடம் கெட்ட எண்ணம் இல்லை. அவரது குடும்பத்திற்கும் இல்லை. எனவே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பிய பின்னர் இந்த நாட்டில் நல்லாட்சி மலரும்.