ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா

446

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா என்பது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார்.

மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டவே விரும்புகின்றேன். அதன் மூலம் மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ஜயரட்ன ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைவாக இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைத் திட்டத்திற்கு மேலும் சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர்.

இதேவேளை அமைச்சர்களான பிரியங்கர ஜயரட்ன, சீ.பி.ரட்நாயக்க, காமினி லொக்குகே போன்றவர்கள் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்நோக்கத் தயார் என தெரிவித்துள்ளனர்.

 

SHARE