ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் விசேட ஆவணத்தில் ஜனாதிபதி சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.

407

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

இதன் காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தற்போது அலரி மாளிகை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தரப்பினருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஜனாதிபதியின் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து 1.30க்கு அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று பிற்பகல் 1.30 அளவில் அறிவிக்கப்பட உள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட உள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளியிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலும், அமைச்சரவைக் கூட்டத்திலும் கூடி ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் விசேட ஆவணத்தில் ஜனாதிபதி சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த ஆவணம் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்படும்.

இதன்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டு தேர்தல் நடத்தப்படுவதனை உறுதி செய்துள்ளார்.

இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட உடன் நாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு கொளுத்தி ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

 

SHARE