தகாத வார்த்தைகளால் நிருபரை வெளுத்து வாங்கிய கோஹ்லி!

385
இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி, பத்திரிகையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பெர்த்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வலைப் பயிற்சியை முடித்துவிட்டு தனது அறைக்கு கோஹ்லி திரும்பிக் கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த இந்திய தேசிய நாளிதழின் நிருபர் ஒருவரை பார்த்து கண்டபடி தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

பின்னர் கோபமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்திய அணியினர் எவரும் இதை எதிர்பார்க்காததால் என்ன நடந்ததெனப் புரியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனால் அந்த இடத்தில் திடீர் பரபரப்பு உண்டானது. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கும் ஏன் கோஹ்லி திட்டினார் எனத் தெரியவில்லை.

தேசிய நாளிதழில் விராட் கோஹ்லி மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து வெளியான செய்திக்கு சம்பந்தப்பட்ட நிருபர் தான் காரணம் என்று கருதி விராட் கோஹ்லி பொது இடத்தில் பொறுமை இழந்து இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அந்த செய்திக்கும் குறிப்பிட்ட நிருபருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது பின்னர் தெரிந்ததும் விராட் கோஹ்லி வருத்தம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, கோஹ்லியை அழைத்து, பொது இடத்தில் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிர்காலத்தில், இந்திய அணியின் அணித்தலைவராக உருவாவதை இத்தகைய செயல்கள் பாதிக்கும் எனவும் கோஹ்லிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

SHARE