தண்டனையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு – பேரறிவாளன் 

288
ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. மத்திய அரசுக்குக் கிடையாது. இவ்வாறு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலை குறித்து, 20-01-16 தேதியிட்ட ஜூனியர் விகடனின் கழுகார் பதில்கள் பகுதியில், வாசகர் ஒருவரின் கேட்டிருந்த கேள்விக்குத் தரப்பட்டிருந்த பதில் தொடர்பாக பேரறிவாளன் தனது வழக்கறிஞர் மூலமாக மறுப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜூனியர் விகடனில் கேள்வி – பதில் பகுதியில், என் விடுதலை குறித்த வாசகர் ஒருவரின் கேள்விக்கு, தங்களின் பதில் ஏற்புடையது அல்ல. மேலும் அதை, டிசம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானதாகவும் பார்க்கிறேன்.

ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. மத்திய அரசுக்குக் கிடையாது.

அரசியல் அமைப்புச்சட்டம் 72 உட்பிரிவு 1-B, மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட தண்டனைப் பிரிவுகளின் கீழ் ஆயுள் சிறை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு தண்டனைக் கழிவு வழங்க முடியும்.

மரண தண்டனை விஷயத்தில் மட்டுமே மாநில மற்றும் மத்திய அரசு என இரண்டு அரசுகளுக்கும் தண்டனையைக் குறைப்பதற்கு சமமான அதிகாரம் உள்ளது.

161-ன் கீழோ, 72-ன் கீழோ, 32-ன் கீழோ, ஒருவருக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகு, அவருடைய ஆயுள் தண்டனையில் இருந்து தண்டனைக் கழிவு வழங்குவதற்கு CRPC 432, 433 ஆகியவற்றின் கீழோ, 161, 72-ன் கீழோ ஏதேனும் ஓர் அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

சம்பந்தப்பட்ட ஆயுள் சிறைவாசி எந்தத் தண்டனை சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அடைந்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும்.

எடுத்துக்காட்டாக, TATA சட்டம் பிரிவு 3, உட்பிரிவு 3-ன் கீழ் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவருக்கு மத்திய அரசு அல்லது குடியரசுத் தலைவர் மட்டுமே தண்டனைக் குறைப்பு வழங்க முடியும்.

302 IPC-ன்படி, ஆயுள் தண்டனை பெற்றுவிட்டால், மாநில அரசு அல்லது ஆளுநர் மட்டுமே தண்டனையைக் குறைக்க முடியும். அதற்கு, தமிழகம் அறிந்த மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஒன்பது கொலைகள் செய்து மரண தண்டனை அடைந்த ஜெயபிரகாஷின் மரண தண்டனையை குடியரசுத் தலைவர் உறுப்பு 72-ன் கீழ் ஆயுள் தண்டனையாகக் குறைத்து, பின்னர் 161-ன் கீழ், 1996-ல் அண்ணா பிறந்தநாளில் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக கருணாநிதி அரசு 161-ன் கீழ் குறைத்த போது, மத்திய அரசை கலந்தாலோசிக்கவில்லை. அவர்களின் அனுமதியையும் பெறவில்லை.

டிசம்பர் 2 உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பாரா 110-ல் உறுப்பு 161-ன் கீழ் எத்தனை முறை வேண்டுமானாலும் மனுச்செய்ய உரிமை உள்ளது என்பதை ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறையை உறுதிபடுத்தி உள்ளது என்று பேரறிவாளன் கூறியிருக்கிறார்.

31-1451529880-perarivalan-600-jpg

SHARE