சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக இருப்பதனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தினர்.
பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாழ். முனியப்பர் ஆலய வளாகத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டனர்.
தமது பிள்ளைகளை விடுதலை செய்ய தவறின் சாத்வீக போராட்டங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொண்டு தாமும் செத்துவிடுவோம் என்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் மேலும் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பரம்சோதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதி கோமகன் மற்றும் கன்னியாஸ்திரிகள், மதகுருமார்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.