தமிழ் மக்களாகிய நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு அப்பால் யாரை ஆதரிக்கக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கவேண்டும்- அரியம் எம்.பி

387

 

த.தே.கூட்டமைப்பில் இருந்து ஒருவர் விலகிவிட்டார் என்ற செய்தி அரசாங்கத்திற்கு தேவையாக இருக்கின்றதே தவிர, விலகுவோரை முதன் நிலைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு திருக்கோயில் பிரதேச சபையின் தவிசாளரின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனுடன்  சென்று அங்குள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

இந்தநாட்டிலே தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்றினை சந்திக்கயிருக்கின்றோம். இந்தத்தேர்தலால் எமக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இங்கு பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றபோதும் இருவரில் ஒருவரே வெற்றி வாய்ப்புக்களை தட்டிக்கொள்வார்கள்.

தமிழ் மக்களாகிய நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு அப்பால் யாரை ஆதரிக்கக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கவேண்டும்.

இதற்காக எமது கட்சி மாவட்ட மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் கட்சி அமைப்புக்கள் சார்பான கருத்துக்களை உள்வாங்கி வருவதுடன் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் ஆராய்ந்து வருகின்றது.

நாங்கள் எங்களது மக்களிடம் தெளிவாக ஒன்றைக் கூறவேண்டும். இவர்களில் எவரேனும் எங்களது மக்களுக்கான தீர்வினை தருவார்கள். ஆகவே இவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற பொய்யான செய்தியை மாத்திரம் மக்களுக்கு சொல்வதினை தவர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த நாட்டிலே பல ஜனாதிபதிகள் ஆட்சி நடத்தியிருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட வரலாறே இல்லை. அவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலில்தான் அரசாங்கத்தினை கொண்டு நடத்தினார்களே தவிர, இந்தநாட்டில் பல தசாப்தகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜே ஆர் தொடங்கி மகிந்த ராஜபக்ச வரையுமான எந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் நினைக்கவில்லை.

தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஒரே கட்சியன் வேட்பாளர்களே. ஒருவர் தலைவர் மற்றவர் அந்தக்கட்சியின் செயலாளர்.

ஆகவே இவர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விடயத்தினை எமது கட்சி நிதானமாக சிந்தித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து உரிய நேரத்தில் எமது தலமையாக இருந்து செயற்பட்டுக் கொண்டுவரும் இரா. சம்மந்தன் ஐயா அறிவிக்கும் வரை அனைவரும் அமைதிகாக்க வேண்டும்.

துமிழருக்கான எந்தத்தீர்வினையும் வழங்கக்கூடாது என்பதில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் குறியாக இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றது.

அதன்காரணமாகத்தான் 65 வருடங்களாக இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் இவர்கள் காட்டிய அக்கரை சான்று பகர்கின்றது.

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள உறுப்பினர்கள் தங்களது தேவை கருதி மாற்றுக்கட்சிக்கு கட்சி தாவி இருக்கின்றார்கள். அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டம் தெரியாத காரணத்தினால் தமது கட்சியில் இருந்து மாறி விட்டு பின்பு கண்ணீர் வடிக்கின்றார்கள்.

காரணம் இவர்கள் கட்சி தாவுவார்களேயானால் அவர்களுக்கு கட்சித்தலமையினால் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டு அந்த இடத்திற்கு அவருக்கு அடுத்தபடியாக இருப்பவரை, கட்சி விரும்பும் ஒருவரை தீர்மானிக்கும் பொறுப்பு தலைமைக்கு இருக்கின்றது.

இதனைத் மதியாதவர்கள் கட்சியில் இருந்து தான் விலகி விட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கையினை விட்டுக்கொண்டு செல்வதனால் எமது கட்சிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை.

இவர்களுக்கான  கடிதம் தற்போது அவர்களது கைகளுக்கு கிடைத்திருக்கும் இதன்பின்னர்தான் தங்களது நிலமை என்ன என்று சிந்திப்பார்கள் எனவும் கூறினார்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszCTdKZgs0.html#sthash.J62YNxU5.dpuf

SHARE