விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சுமார் 50 நாட்களின் பின்னர் தமது தாயகத்தை சென்றடைந்துள்ளதாக இராமேஸ்வரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் இம்மாதம் 5ஆம் திகதி வரை கைது செய்யப்பட்ட மீனவர்களே இவ்வாறு தாயகத்தை நோக்கி சென்றுள்ளனர்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நல்லிணக்க அடிப்படையில் குறித்த தமிழக மீனவர்களை விடுதலை செய்யமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் இது வரை அவர்களிடம் மீளக்கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டு விடுதலையான இராமேஸ்வர மீனவர்களின் வருகையை அடுத்து அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றுள்ளனர்.