திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர்.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை தரை இறக்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் காலை 6.10 மணிக்கு மீனம்பாக்கத்தில் தரை இறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்டதும் ஏற்பட்ட கோளாறை உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
விமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனாலும் பயணிகள் திட்டமிட்டப்படி துபாய் போய் சேர முடியாததால் பலமணி நேரம் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.