நட்சத்திர ஹோட்டலில் நடந்த மோதலில் தமிழர் உயிரிழப்பு: அரபு இளைஞர் கைது

275
துபாய் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மோதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் துபாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தின்போது, மகேந்திரன் தமது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.இவர்களுக்கு அருகில் உள்ள இருக்கையில் அரபு இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகேந்திரன் தனது நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார், இதை கவனித்த அரபு இளைஞர், தங்களை படம் பிடிப்பதாக கருதி தகராறு செய்திருக்கிறார்.

தகராறு அடிதடியாக மாறியபோது அந்த அரபு இளைஞர் மகேந்திரனின் தலையின் பின்புறம் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மகேந்திரன் மயக்கமுற்று கீழே விழுந்தார்.

இதனையடுத்து மகேந்திரனின் நண்பர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக பொலிசாருக்கும் மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் மயக்கமுற்று கிடந்த மகேந்திரனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரபு நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE