நாட்டில் அமைதி நிலவுவதையும் நல்லிணக்கம் ஏற்படுவதையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலான இனவாத குழுக்கள் விரும்பவில்லையென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையென்றும், அதன் காரணமாகவே தற்போது உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை குழப்பும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில், ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க விரும்பியிருந்தால் யுத்தம் முடிவடைந்த பின்னரே அதனை பெற்றுக்கொடுத்திருப்பார்கள் என குறிப்பிட்ட அமைச்சர் லக்ஷ்மன், மாறாக கடந்த ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பானது, கடந்த கால முரண்பாடுகளை தவிர்த்து, நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலே உருவாக்கப்படுமே தவிர, மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை ஏற்பட வழிவகுக்காதென அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமாகாதென்றும், அதுகுறித்த எவ்வித முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.