ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) எழுதிய இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016) நூல் வெளியீட்டு விழா இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாமண்டபத்தில் ஆரம்பமானது.
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகரும், செயலாளருமான தமிழருவி சிவகுமாரன் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெற்று வருகின்றது.
நூலினை பேராசிரியர் சிற்றம்பலம் ஐயா வெளியிட்டு வைக்க அதனை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் லண்டன் கிளையின் பொறுப்பாளர் வைத்தியகலாநிதி ரவி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், இந்திரராஜா, தியாகராஜா, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சிவகரன், அரசியல், சமூக ஆய்வாளர் நிலாந்தன், அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மூத்த ஊடகவியலாளர் ராதையன் நிகழ்வில் கலந்து கொள்ளாத போதும் தன் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவரே நூலை வெளியிட்டு வைக்க அழைப்பிதழில் குறிக்கப்பட்டிருந்தும், இந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உருவான அனைத்து அரசியல் யாப்புக்களுமே புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமாக வடிவமைக்கப்பட்டது என்று கூறும் இந்நூல், அனைத்து யாப்புக்களையும் அதற்கான நீண்ட வரலாற்றுப் பின்னணியில் இருந்து ஆராய்கிறது. உள்நாட்டு அரசியல், அண்டைநாட்டு அரசியல், பிராந்திய அரசியல், சர்வதேச அரசியல், வெளி வல்லரசுகளின் பூகோளம் தழுவிய அரசியல் ஆகிய அனைத்து வகைச் சக்திகளின் அரசியல் நலன்களுக்காக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் அரசியல் யாப்பு ரீதியாக அனுசரித்தும் நடக்கின்றன.
இதனால் அனைத்து வழிகளிலும் அதாவது உள்நாட்டு ரீதியாகவும், அயல்நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், பூகோள வல்லரசு ஆதிக்க ரீதியாகவும் அனைத்து சக்திகளினாலும் பெரிதும் பலியிடப்படுபவர்களாக சர்வதேச அரசியல் பின்னணியிலும், சர்வதேச மற்றும் பூகோள அரசியல் பின்னணியிலும் வைத்து இந்நூல் அதன் இரத்தமும் துயரமும் தோய்ந்த உண்மைகளை ஆராய்கிறது.
இத்தகைய அனைத்து விடயங்களையும் ஆராயும் இந்நூல் புவிசார் அரசியல் பிரச்சனைக்கான தீர்வில் இருந்தே இனப்பிரச்சனைக்கான அரசியல் யாப்பு தீர்வு வடிவமைக்கப்பட வேண்டுமென்றும், பகைமையின் அளவே தீர்வின் அளவை தீர்மானிக்கும் என்பதால் இனப்பகைமையின் இரத்தம் தோய்ந்த அளவைக் கருத்தில் கொண்டே அதற்கானத் தீர்வைக் காணவேண்டும் என்றும் முற்றிலும் அறிவுபூர்வமாக எடுத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.