இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
ரணில் – மைத்ரி அரசாங்கம் மேற்கொண்டுவரும் புதிய அரசியல்யாப்பில், வார்த்தை ஜாலங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டாடும் சதி முயற்சியொன்றும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொறட்டுவை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதம் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சம் அனைத்து பௌத்த மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளதால், இந்த நிலைமையை புரிந்துகொண்டு, ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
‘யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படையினரை பலிவாங்கும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதற்காகவே போர் குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்திற்கு அமைய சர்வதேச விசாரணைகளையும் நடத்த தற்போதைய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருக்கின்றது’ என்றும் கூறினர்.