தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்குமிடையிலான யாழ். சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம். இச்சந்திப்பின் மூலம் தமிழர் வாழ்வியலிலும் அரசியலிலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்கவுள்ள நிலையில் இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலும் இலங்கையில் நல்லாட்சி உருவாக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை பதவியிலிருப்பவர். இரண்டாவது முறையாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தனது பதவிக்காலத்தின் கடைக்கூற்றில் இலங்கை வந்துள்ளார்.
அவருடனான எமது சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெறுமதிமிக்கதாகவும், வரலாற்று பதிவை உருவாக்கும் சந்திப்பாகவும் இருக்குமென்று நம்புகின்றேன்.
ஐ.நா. செயலாளர் நாயகத்தை நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திக்க இருக்கின்றோம். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பான் கீ மூன் செயலாளர் நாயகமாக இருந்த காலத்தில்தான் யுத்தம் முடிவடைந்தது. யுத்தம் முடிவுற்ற பி்ன்னர் 2009இல் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தையும் பார்வையிட்டு அதன்பின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு பேச்சுவார்த்தையை நடாத்தியதுடன் ஒன்றிணைந்த கூட்டறிக்கையும் விடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல நடவடிக்கைகள் இடம்பெற்றன. அக்கருமங்கள் நடைபெறுவதற்கு முக்கியமான அடிப்படை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலும் செயலாளர் நாயகத்தினாலும் விடப்பட்ட மேற்படி கூட்டு அறிக்கையாகும். அதைத்தொடர்ந்து அவருடைய காலத்தில் இலங்கையில் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார்.
அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது ஓர் அறிக்கையை வெளியிட்டது. மனித உரிமை மீறல் தொடர்பாகவும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறல் சம்பந்தமாகவும் காத்திரமான அறிக்கையொன்று அந்த நிபுணர் குழுவால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் ஓர் பிரதி இலங்கை அரசாங்கத்துக்கும் மற்றும் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்துதான் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டு 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் நாயகம் பான் கீ மூன் விரைவில் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற இருக்கிறார். ஐ.நா. செயலாளர் நாயகம் என்ற வகையில் இலங்கைக்கான விஜயம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பேசவேண்டிய பல விடயங்களும் அவருடன் நாம் பேசவிருக்கிறோம்.
கேள்வி : அரசியல் தீர்வு, நீதிப் பொறிமுறை சம்பந்தமாக பேசப்படுமா?
பதில் : எல்லா விடயங்களும் பேசப்படும், எங்கள் சந்திப்பு முக்கியத்துவம் உடையதாகவும், வரலாற்று பெறுமதியுடையதாகவும் அமையும் என்றார்.