தமிழீழ விடுததலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தி தனக்கு கவலை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜித, யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக செயற்பட்ட பல்வேறு அமைப்புக்களுடனும் தான் தொடர்புகளை பேணி செயற்பட்டதாகவும் அந்த வகையில் ஈரோஸ் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றுடனும் அரசியல் ரீதியான தொடர்புகளை பேணி வந்த நிலையில் பிரபாகரனின் இறப்பு செய்தி தன்னுடைய மனதில் இனம் புரியாத ஒரு கவலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இனவாதத்திற்கு எதிரான கருத்துடைய சிங்கள அரசில்வாதிகளில் முதன்மையானவராக மதிக்கப்படுகின்ற ராஜித சேனராத்னவிற்கு 80 ஆண்டுகளில் ஜே.வி.பி இனால் உயிரச்சுறுத்தல் ஏற்பட்ட காலப்பகுதியில் அப்போதைய தமிழ் ஆயுத இயக்கங்கள் சில அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.