– இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.
யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய புக்காரா குண்டு வீச்சில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் 22 பேரின் நினைவு நாள் நிகழ்வு நேற்றுமுன்தினம் பிற்பகல் பெற்றோர்களின் கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை எம்.பி.
மேற்கண்டவாறு கூறினார்.
உயிர்நீத்த மாணவர்களுக்காக நாகர்கோவில் மகா வித்தியாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியில் நிகழ்வு ஆரம்பமானது. தூபிக்கான முதல் மாலையை அந்தக் குண்டு வீச்சில் தனது இரு பிள்ளைகளையும் பறிகொடுத்த தாயார் அணிவித்தார். தொடர்ந்து உயிர்நீத்த பிள்ளைகளின் உறவுகள் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கான மலர் மாலையை அணிவித்து அஞ்சலிகளைச் செலுத்தினர். தொடர்ந்து பெற்றோரால் மாணவர்களின் நினைவாக தீபங்கள் ஏற்றப்பட்டன
இந்த நிகழ்வில் மாவை எம்.பி. உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“மிகப்பெரிய போராட்ட இயக்கமாக வளர்ந்திருந்தபோதும் பன்னாட்டு இராஜதந்திர வெற்றிகளைப் பெறுவதில் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் போராட்டம் இந்த நிலையை அடையக் காரணமாக உள்ளது. எனவே, பன்னாட்டு சமூகத்திடம் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்டு மிகக் கவனமாகவும் அவதானமாகவும் மக்களின் ஆணையை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மக்களின் ஒற்றுமையும் அவர்கள் எம்மீதுவைத்திருக்கின்ற நம்பிக்கையும் தொடர்ந்து பேணப்படவேண்டும்.
விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய சக்தியாக இருந்த காலப்பகுதியில், அந்த சக்தியின் ஜனநாய சக்தியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இருந்த காலப்குதிதான் பலம்பொருந்திய காலப்பகுதியாக இருந்தது.
இன்று அந்தப் பலத்தை நாம் இழந்திருந்தாலும், எமக்கு முன்னால் இருக்கின்ற எத்தனையோ தடைகளைத் தாண்டி நாம் செல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இலட்சக்கணக்கான மக்கள் விடுலைக்காகத் தங்கள் இன்னுயிர்களைக் கொடுத்திருப்பதனைப் போலவே இந்த மாணவச் செல்வங்கள் அப்படி ஒரு சந்தர்ப்பம் தமக்கு ஏற்படும் என்று நினைத்திருக்கமாட்டார்கள். அந்த மாணவர்களை இழந்துவிட்டு வற்றாத கண்ணீருடன் அழுதுகொண்டு திரிகிறார்கள் பெற்றோர். அந்தக் கண்ணீர் எமது நெஞ்சத்தை நிறைத்துவிடவில்லை.
மாறாக, எம் இதயத்தில் வலிகளையும் கோபத்தையுமே நிறைத்துள்ளது. எங்கள் வரலாற்றில் நாம் பலமுறை சாகடிக்கப்பட்டதாகத் தூக்கி வீசப்பட்டவர்கள். நல்லவேளையாக இனத்தின் விடுதலையை வழிநடத்திய இயக்கமாக இங்கு வந்து நிற்கிறோம்.
எங்களுடைய மக்கள் கல்வி, உழைப்பு, கலை, கலாசாரத்தைப் பேணுவதைவிட இந்தப் பிள்ளைகள் தங்கள் உடன்பிறப்புக்களை இழந்துவிட்டு வீடுகளுக்குள் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்காமல் எங்கள் முன்னால் ஆடிப்பாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேபோல இன்னும் அவர்கள் சோர்ந்துபோகாமல் எமது கலை, கலாசாரங்களைப் பேணவேண்டும். பன்னாட்டு விசாரணை தொடர்பில் பல்வேறு விசாரணைப் பொறிமுறைகள் தற்போது ஆரம்பித்திருக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின்படி இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட
வேண்டும். இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்டு எமது நிலங்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெறவேண்டும். எமது மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்ப வேண்டும். தங்கள் தொழிலைச் சுதந்திரமாகச் செய்யவேண்டும்.
அதனைவிட எமது இளையோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இலட்சக்கணக்கான உயிர்கள் எதற்காகப் காவுகொடுக்கப்பட்டதோ அந்த 22 பச்சிளங்குழந்தைகளும் எதற்காக சாவடைந்தார்களோ அந்த அத்தனை ஆன்மாக்களும் தெரிந்தோ தெரியாமலோ எங்கள் விடுதலைக்காகத் தங்கள் உயிர்களைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகங்கள் பயனடைய வேண்டும்.
இப்படிப்பட்ட சிறுபிள்ளைகள் போரினால் இனியும் அழிந்துபோகக்கூடாது. அவர்கள் இன்னுமொரு ஆயுத கலாசாரத்தை நாடக்கூடாது. அதற்கேற்றால்போல் நாங்கள் நவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
யாழ்ப்பாணத்துக்கு வந்த ஐ.நா. செயலர் நாயகம் பான் கீ – மூனிடம் நாங்கள் மிகத் தெளிவாக மிக உறுதியாகச் சில விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
எமது 90 ஆயிரம் பெண்கள் இராணுவச் சூழலில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இடத்தில் உள்ளார்கள். அவர்களுக்கான பாதுகாப்புக் கிடைக்கவேண்டும் என்பதனை ஐ.நா. செயலரிடம் வெளிப்படுத்தினோம்.
எமது மக்கள் நம்பிக்கை வைத்து இந்த அரசைக் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் மேலும் ஏமாற்றப்பட்டால், அஹிம்சை வழியில் போராடுவோம். அதற்கு பன்னாட்டுச் சமூகம் ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் அவருக்குக் கூறியிருக்கின்றோம்” – என்றார்.