பேரனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாத்தா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதார். இதுகுறித்து அவர் எழுதிவைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அடுக்குமாடி
புனே கோண்டவா சாந்திநகர் பகுதியில் உள்ள ஜைன் சொசைட்டி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுதீர் ஷா(வயது65). இவரது பேரன் ஜினய் (10).
நேற்று முன்தினம் இரவு சுதீர் ஷா, பேரன் ஜினய்வுடன் படுக்கை அறைக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுதீர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். சத்தம் கேட்ட குடும்பத்தினர் அங்கு வந்து பார்த்த போது சுதீர்ஷா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பேரன் கொலை
உடனே வீட்டிற்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் சிறுவன் ஜினய் மூச்சு, பேச்சின்றி கிடந்தான். குடும்பத்தினர் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோண்டவா போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுதீர் ஷாவின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இப்போது சுதீர் ஷா எழுதிவைத்த கடிதம் சிக்கியது.
கடன் சுமை
இதில் அவர், ‘‘ சிரூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்து வழக்கு காரணமாக அதிகளவில் கடன்சுமை ஏற்பட்டு விட்டது. இதனால் மனதளவில் பாதிப்பு அடைந்ததால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. பேரன் ஜினய்யை விட்டு பிரிய மனமின்றி அவனையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்’’ என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் சுதீர்ஷா பேரன் ஜினய்யை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.