பிரித்தானியாவில் பேருந்து நிறுத்தமொன்றில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.லண்டனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிட்சாம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று 45 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் Amen Corner பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து நின்றுள்ளனர். அப்போது அப்பகுதிக்கு வந்த ஆண்கள் 3 பேர் அவர்களுடன் பேச்சுக்கொடுத்துள்ளனர், பின்னர் திடீரென்று அந்த ஆண்களில் 2 பேர் பெண்கள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இச்செயல்களை மூன்றாவது நபர் தமது கமெராவில் பதிவு செய்தும் வந்துள்ளார். இதனிடையே அப்பகுதிக்கு வந்த பேருந்தில் இருந்து வெளியேறிய சில பயணிகள் நடுத்தர வயது பெண்கள் இரண்டு பேர் தாக்கப்படுவதை கண்டு மெட்ரோ பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பகுதிக்கு பொலிசார் வந்து சேர்வதற்கு முன்னரே அந்த மூவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெரா பதிவுகளை ஆராய்ந்து சம்பந்தபட்ட நபர்களின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பொதுமக்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். |