விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருப்பவர் பொட்டுஅம்மான். இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த போரில் இவர் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கும் தகவலை சிங்கள உளவுத்துறை சுமார் 2 மாதத்துக்கு பிறகு கண்டுபிடித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பை இடைமறித்து கேட்டபோது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக சிங்கள உளவுத்துறை கூறி உள்ளது. இலங்கை அரசிடமும் இந்த தகவலை உளவுத்துறை உறுதிபடுத்தி உள்ளது.
பொட்டுஅம்மானை விடுதலைப்புலிகள் “குருவி” என்று அழைப்பது வழக்கம். குருவி பெயரில் சில உத்தரவுகள் வழங்கப்பட்டதை உளவுத்துறை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளது.
சமீபத்தில் கொழும்பில் பிரபா என்ற விடுதலைப்புலி சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்பேரில் வெள்ளவத்தையில் ஒரு வீட்டை ராணுவத்தினர் சோதனையிட்டனர்.
அப்போது விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதன்மூலம் விடுதலைப்புலிகளின் உளவுப்படை இன்னமும் கொழும்பில் வலுவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
TPN NEWS