வவுனியாவில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து பாதிப்பு
வவுனியா கலாபோகஸ்வேவ கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஏ9 வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இக்கிராமத்து வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் உள்ளதுடன் மண் வீதியாகவே காணப்படுகிறது இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைவதுடன் குழந்தைகள், வயதானவர்கள் நோய் தாக்கத்திற்குள்ளவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அக்கிராமத்து மக்களால் மாமடு சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹொரவப்பொத்தானை வீதி வழியாக ஊர்வலமாக சென்று, வவுனியா மணிக்கூட்டுக் கோபுரப் பகுதி மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இருந்தபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்கள் எதனையும் செல்லவிடாது தடுத்ததுடன் பிரதான வீதிகளை மறித்தபடியே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். பொலிசார் வீதி ஒழுங்கை நெறிப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியா மணிக்கூட்டு கோபுரச்சந்தியை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் அமர்ந்தபடி பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுடைய உரிமை தூசி மட்டுமா? தூசி பாதை எங்களுக்கு மட்டுமா, எங்கள் கிராமத்திற்கு வீதி வேண்டும், எங்கள் வீதி எங்களுக்கு வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.
இதேவேளை, வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது போக்குவரத்து தடைப்பட்டதுடன் அம்புலன்ஸ் வண்டி கூட அவசர நோயாளரை கொண்டு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டிருந்தது.