போரில் அங்கவீனமான இராணுவத்தினர் அலரி மாளிகையை முற்றுகை

374

 

போரில் அங்கவீனமான இராணுவத்தினர் அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அங்கவீனமான சுமார் 300 இராணுவத்தினர் இவ்வாறு அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். அரசாங்கம் தமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு செயற்பட்டதாகவும் இரத்துச் செய்யப்பட்ட அங்கவீனமான இராணுவத்தினர் உட்பட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அங்கவீனமான இராணுவ அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளரும் கொமாண்டோ படையணியின் அதிகாரியுமான டி.எம்.பி.பீ. திஸாநாயக்க தெரிவிக்கையில்,

அங்கவீமான இராணுவத்தினரான எமக்கு கடந்த 22 வருடங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அங்கவீமான இராணுவத்தினரில் இரண்டு கண்களிலும் பார்வையிழந்த படையினரும் உள்ளனர்.

அரசாங்கம் என்ன கூறினாலும் எமக்கு இதுவரை எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

அத்துடன் அங்கவீனமான எங்களது கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர ஏனைய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திய போது எந்த பயனும் ஏற்படவில்லை.

ஜனாதிபதிக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களின் பின்னர் பதில் வந்தது. ஜனாதிபதிக்கு பணிச் சுமை அதிகம் என்பதால், பாதுகாப்புச் செயலாளரிடம் முறையிடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரிடம் கூறியும் பயனில்லாமல் போனது. இதனால் இறுதியாக இந்தப் பிரச்சினைக்கு பதிலை எதிர்பார்த்து நாங்கள் இங்கு வந்துள்ளோம் என திஸாநாயக்க கூறியுள்ளார்.

 

SHARE