ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் தீவுகளில் ஒன்றான Mallorca என்ற நகரில் இரண்டு தினங்களுக்கு முன்னர் 44 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மகனுடன் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று பொலிஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் பறந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொலிஸ் அதிகாரியின் 8 வயது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நிகழ்ந்த சாலையில் உள்ள மற்ற பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், 35 வயதான அப்பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பெண்ணிடம் பரிசோதனை செய்தபோது அவர் குறிப்பிட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக மது அருந்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதியின் முன்பு மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். பெண்ணுடன் இருந்த அவரது நண்பர் ஒருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை நிகழ்த்தியவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.