விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் விட்டுக்கொடுக்காத தன்மைகளே அவ்வியக்கம் அழிந்து போவதற்கு பிரதான காரணமாக அமைந்தது. சில விடயங்களில் அவர் விடாப்பிடியாக இருக்காமல் தந்திரோபாயமாக காய்நகர்த்தியிருந்தால் புலிகள் இயக்கத்தைப் பாதுகாத்திருக்கலாம். இயக்கத்திலிருந்தபோது நான் அரசியல் தீர்வுக்கே அழுத்தம் கொடுத்தேன். எனினும் பிரபாகரன் அரசியல் தீர்வுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆரம்பித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தையின்போது கொண்டுவரப்பட்ட உடன்படிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அனுமதிபெறாமல் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை நானே மேற்கொண்டேன். அதுவே விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து எனது வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை வர் பிரபாகரன் அரசியல் தீர்வை ஒரு போதும் விரும்பவில்லை. யுத்தத்தினூ டான தீர்வையே அவர் எதிர்பார்த்தார். அவரது பிடிவாதக் குணமே அவ்வியக்கம் அழிவடைவதற்கு பிரதான காரணமாகும்.
இறுதி கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலிலிருந்து தனது குழுவுடன் தப்பிக்க முற்பட்ட வேளையிலேயே அவர் கொல்லப்பட்டார் என முன்னாள் பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அந்த செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக அண்மையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களே…
பதில்: அது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். முள்ளிவாய்க்காலுக்கு நான் நேரடியாக சென்று பிரபாகரனின் சடலத்தைப் பார்த்தேன். அவர் இறந்து கிடந்த விதத்தை , எனக்குள்ள போர் அனுபவத்தை அடிப்படையாக வைத்து பார்த்தபோது அது தற்கொலையாக இருக்கலாம் என எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தையே தெரிவித்தேன்.
கேள்வி: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்து கொழும்புக்கு கொண்டுவந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டதே…
பதில்: அது மாத்திரமல்ல, கொழும்புக்கு கொண்டுவந்து அவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கியதாகவும் அதற்குப் பின்னரே பிரபாகரன் கொலை செய்யப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
எனினும் அவற்றில் எவ்வித உண்மையுமில்லை. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இரவு நேரம் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றின்போதே அவர் இறந்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற தினத்தின் அதிகாலை வேளையில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது நந்திக்கடல் ஓரத்தில் பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதாவது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று அடையாளம் தெரியாது இரவு நேரம் நடைபெற்ற தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். எனினும் முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் இருப்பது இராணுவத்திற்குத் தெரியும்.
சம்பவ தினம் பிரபாகரன் தனது குழுவுடன் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக முன்னேறி வந்துள்ளார். அப்போது இராணுவத்தினர் பதுங்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்தாக்குதலின்போதே அவர் இறந்துள் ளார்.
கேள்வி: பிரபாகரனின் சடலத்தை நீங்களே முள்ளிவாய்க்காலுக்கு சென்று அடையாளப்படுத்தினீர்கள். அதற்கான அனுமதி தங்களுக்கு யாரிடமிருந்து கிடைத்தது?
பதில்: அதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எனக்கு வழங்கினார். அதனால் நான் கொழும்பிலிருந்து அங்கு சென்று சடலத்தை அடையாளப்படுத்தினேன்.
மேலும், என்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தை காட்டிக்கொடுத்ததாகக் குறிப்பிடுகின்றனர். நான் அவ்வாறு செய்ய வில்லை. இயக்கத்திலிருந்து பிரிந்த பின் னர் ஒரேயொரு முறைதான் நான் களமுனைக்குச் சென்றுள்ளேன்.
பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டுவதற்காகவே களமுனைக்குச் சென்றேன். முன் னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா வும் கருணா, யுத்த வெற்றிக்கு எந்த வகையிலும் இராணுவத்திற்கு உதவிசெய்யவில்லை என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றமைக்கான பிரதான காரணம் என்ன?
பதில்: அதாவது, ஜயசிக்குறு சண்டை முடிவடைந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அரசியல் ரீதியில் பயணிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் ஏற்பட்டன.
அது தவிர சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அழுத்தம் அதிகரித்திருந்த காலம் அது. அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த பின்னர் பயங்கரவாத அமைப்புகளை முடக்குவதற்கான செயற்பாடுகள் அப்போது சர்வதேச ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அந்த காலகட்டத்தில்தான் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனவே அந்தப் பேச்சுவார்த்தையினை அடித்தளமாகக்கொண்டு சமஷ்டி முறையிலான தீர்வொன்றை பெற்று, சர்வதேச நெருக்கடியிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை காப்பாற்றவே நான் முனைப்புக் காட்டினேன். அதனையே விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் விரும்பினார்.
எனினும் தொடர்ந்து ஆறு வருடங்களாக நடைபெற்ற ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. ஒஸ்லோ பேச்சுவார்ததையில் நான் மற்றும் அன்டன் பாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தோம்.
ஆறு வருடங்களின் பின்னர் அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒரு உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. அதாவது இனியும் பேச்சுவார்த்தையினைத் தொடர்வதாக இருந்தால் ஏதாவதொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். அந்தப் புள்ளியாக ‘சமஷ்டி முறையான தீர்வைப்பற்றி பரிசீலிப்போம்’ எனக் குறிப்பிட்டு உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. எனவே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் பேச்சுவார்த்தையினைத் தொடரலாம் எனக் குறிப்பிடப்பட்டது.
எனவே, தொடர்ந்து ஆறு வருடங்களாக மேற்கொள்ளப்ட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடு எட்டாததாலும் அப்போதைய நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதிருந்த சர்வதேச அழுத்தத்திலிருந்து இயக்கத்தை காப்பாற்றும் நோக்கிலும் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அன்டன் பாலசிங்கத்தை ஊக்கப்படுத்தினேன்.
எனினும் அவர், தலைவர் பிரபாகரனின் அனுமதி பெற்ற பின்னரே கைச்சாத்திடலாம் எனக் கூறினார். ‘நீங்கள் கைச்சாத்திடுங்கள். நான் தலைவரிடம் தெளிவுபடுத்துகிறேன்” என்று அன்டன் பாலசிங்கத்தை ஊக்கப்படுத்தி அவரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைத்தேன். உருத்திர குமார், அவுஸ்திரேலியாவிலுள்ள யோகி மகேஸ்வரன் ஆகியோருக்கு இவ்விடயம் நன்கு தெரியும்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் நாட்டுக்கு வந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டத்தை சதிக்குள் கொண்டு சென்று புலிகள் இயக்கத்தை வீழ்த்துவதற்கான திட்டமே குறித்த ஒப்பந்தம் எனக் கருதி பிரபாகரன் அதனை எதிர்த்தார். ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு நான் ஊக்கப்படுத்தியமையால் பிரபாகரன் என்மீதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனால் ஏற்பட்ட முரண்பாடே நான் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது.
கேள்வி: அப்போது ஆட்சியிலிருந்த ஐக் கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக் கும் உங்களுக்குமிடையில் இரகசிய உறவிருந்ததாக கூறப்படுகிறதே…
பதில்: ஐக்கிய தேசியக் கட்சியினர் என்னை தாங்கள்தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்ததாகக் குறிப்பிடுகின்றனர். அது உண்மையான கருத்தும்தான். அப்போதைய ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஏற்பாடு செய்திருந்தார். அந்த பேச்சுவார்த்தையே எனது வெளியேற்றத்திற்கும் காரணமாக அமைந்திருந்து. எனினும் இயக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு எவரும் என்னுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானவிற்கும் உங்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக குறிப்பிடப்படுகிறதே…
பதில்: ஆம், நிச்சயமாக. அவருக்கும் எனக்குமிடையில் நெருக்கமான உறவு இருந்தது. வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் படுகொலை போன்ற சம்பவங்களினால் தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் குரோதம் காணப்பட்டது.
ஆகையினால் பாராளுமன்ற உறுப்பி னர் அலிசாஹிர் மௌலானா என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி இரு சமூகங்களுக்குமிடையிலான உறவை வளர்ப்பதற்கு கடுமையாகக் பாடுபட்டார். அதனால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கொள்ளைச் சம்பவங்களைக்கூட கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து என்னை பிரிப்பதற்கு அவர் எவ்வகையிலும் செயற்படவில்லை.
மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நான் பிரிந்தபோதும் அவருடன் தொடர்பு கொண்டு ‘தொடர்ந்தும் இயக்கத்துடன் இணைந்து யுத்தம் புரிய எனக்கு விருப்பம் இல்லை.அதனால் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு’ அவரிடமே உதவி கோரினேன்.
அதனால் அவர் எனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து, அவரே என்னை கொழும்புக்கு அழைத்து வந்தார். அவர் எனக்கு பாதுகாப்பு வழங்கியதால் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது. அப்போதைய அரசாங்கத்தால் அவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை. அதனால் அவர் தனது எம்.பி. பதவியை துறந்து வெளிநாடு சென்றார்.
கேள்வி: விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தாங்கள் வெளியேறிய சம்பவத்தை கூற முடியுமா?
பதில்: அப்போது நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தபோதும் நிர்வாகக் கட்டமைப்பில் புலிகளின் தரைப்படைத் தளபதியாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தேன். முரண்பாடு ஏற்பட்ட பின்னர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்தார். எனினும் நான் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பவில்லை என்பதைத் தெரிவித்தேன்.
அது இயக்கத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவிய சந்தர்ப்பம். அப்போது கட்டாயப் பயிற்சி நடைபெற்ற காலம். எனினும் எனது தலைமையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஆறாயிரம் போராளிகள் இருந்தனர்.
தலைவருடனான பேச்சுவார்த்தைக்கு நான் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, எனது தலைமையின் கீழிருந்த ஆறாயிரம் போராளிகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புமாறு வேண்டிக்கொண்டனர். எனினும் அது ஒப்பந்த காலம் என்பதால் போராளிகளை அங்கு அனுப்ப முடியாது எனக்கூறி அதனை மறுத்து போராளிகளை அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பிக் கொண்டிருந்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் மூதூரினூடாக ஊடறுத்து வாகரையில் தாக்குதல் ஒன்றை நடத்தினர். அதில் பலர் கொல்லப்பட்டார்கள். அந்த தாக்குதலை வரலாற்றில் மறக்க முடியாது. அத்துடன் இறந்து கிடந்த சடலங்களை அடக்கம் செய்யக்கூடாது எனவும் வாகரை மக்களுக்கு புலிகள் உத்தரவிட்டனர்.
எனவே எனது தலைமையின் கீழிருந்த போராளிகளை அவர்களது பெற்றோர்களிடம் அனுப்பிவைத்த பின்னர்தான் நான் அலிசாஹிர் மௌலானா எம்.பி. யின் உதவி பெற்று கொழும்புக்கு வந்தேன்.
கேள்வி: தாங்கள் இயக்கத்திலிருந்து வெளியேறி கொழும்பு புறப்பட்டபோது புலி களின் படை முகாம்கள் அமையப்பெற்றுள்ள விபரங்களை மாத்திரம் எடுத்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறதே…
பதில்: இல்லை. அவ்வாறு எதனையும் நான் கொண்டு வரவில்லை. எனது ஆடைகள் உள்ள பெட்டியைக்கூட எடுத்துவரவில்லை. மேலும் நான் புலிகள் இயக்கத்தின் செயற்பாடு பிடிக்காததால் வெளியேறி வந்தேனே தவிர அவ்வியக்கத்திற்கு துரோகம் செய்யவேண்டும் என்பதற்காக வரவில்லை. அதனால் அவ்வியக்கத்திற்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவுமில்லை.
கேள்வி: விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விமானங்களும் இருந்தன. அதற்கு வெளிநாடுகளின் உதவி இருந்ததா?
பதில்: அதனை வெளிநாடுகளின் உதவி என்று சொல்ல முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் விமானப் பயிற்சி கல்லூரிகள் உள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கம் போராளிகளை, அக்கல்லூரி களில் பணம் செலுத்தி பயிற்சி பெறவைத்தனர். மேலும் விமானங்கள் நேரடியாக இங்கு கொண்டுவரப்படவில்லை. மாறாக விமானங்களின் உதிரிப்பாங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றை இலங்கையிலேயே பொருத்தினர். இரணைமடுவில் புலிகளின் விமான ஓடுபாதை யொன்றும் இருந்தது.
கேள்வி: யுத்தக்குற்றங்களை இருதரப்பும் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அது தொடர்பில் தாங்களும் பதில் சொல்லவேண்டிய தேவையுள்ளதே…
பதில்: அதாவது, ஐ.நா. அறிக்கையானது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்கான பொறிமுறையாகும். எனினும் அவ்வறிக்கையின் ஒரு பந்தியில் போராளிகளாக சிறுவர்களைச் சேர்த்தமை தொடர்பில் ‘கருணா குழு’ எனக்குறிப்பிடப்பட்டுள் ளது.
எனவே, அவ்வாறான செயற்பாடுகளில் நான் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆகவே அவ்வாறான விசாரணைகளை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.
கேள்வி: விடுதலைப்புலிகளின் தோல்விக்கு தங்களின் வெளியேற்றமே காரணமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறதே…?
பதில்: நீங்கள் சொல்வதைவிட, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் விட்டுக்கொடுக்காத தன்மைகளே அவ்வியக்கம் அழிந்துபோவதற்கு பிரதான காரணமாக அமைந்தது. சில விடயங்களில் அவர் விடாப்பிடியாக இருக்காமல் தந்திரோபாயமாக காய்நகர்த்தியிருந்தால் புலிகள் இயக்கத்தைப் பாதுகாத்திருக்கலாம். இயக்கத்திலிருந்தபோது நான் அரசியல் தீர்வுக்கே அழுத்தம் கொடுத்தேன். எனினும் பிரபாகரன் அரசியல் தீர்வுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மாறாக யுத்தத்தினூடாக தீர்வொன்றைப் பெறுவதற்கே அவர் விரும்பினார்.
மேலும், அவ்வியக்கத்தின் தோல்விக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வெளியேற்றம் அவ்வியக்கத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கலாம். அல்லது இறுதிகட்ட யுத்தத்தின்போது யுத்த தந்திரோபாயம் தெரியாமல் சிக்கி தோல்வியடைந்திருக்கலாம்.
கேள்வி: கடந்த அரசாங்க ஆட்சியின் போது முன்னாள் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி ஒப்பந்தக் கொலைகள் மேற் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தங்களின் உதவியையும் நாடிய சம்பவங்கள் உண்டா?
பதில்: இல்லை. ஒப்பந்தக் கொலைகள் என்பது முற்று முழுதாகத் தவறான கருத் தாகும். நான் விடுதலைப்புலிகள் இயக் கத்திலிருந்து விலகியதன் பின்னர் எந்த வொரு ஆயுதக் குழுக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.
கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக பதவி வகிக்கும் நீங்கள் அக்கட்சியிலிருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அது தொடர்பில்…
பதில்: விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்தது பிரிந்து ஒரு வருடத்தின் பின்னர் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாக நேரடி அரசியலில் இணைந்துகொண்டேன். அப் போதைய காலகட்டத்தில் குறித்த கட்சி யில் இணைய வேண்டிய அவசியம் இருந்தது. அது காலத்தின் தேவையாகவும் அமைந்தது.
தற்போது தமிழ் கட்சியொன்றுடன் இணைந்து எனது அரசியல் பயணத்தை தொடர்வதற்கு நான் விரும்பபுகிறேன். இணையும் தமிழ் கட்சியும் இனக்குரோதமற்ற ஜனநாயக பண்பாடுகளைப் பேணிவருகின்ற கட்சியாக இருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதனால் தமிழர் விடுதலை கூட்டணியில் இணைவதற்கு எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை என கூறப்படுகிறதே
பதில்: அது முற்று முழுதாக தவறான விடயம். ஏனெனில் அக்கட்சியினை தோற்றுவிக்கும்போது நானும் அதில் பங்காளனாக இருந்தேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடித்தளத்திலிருந்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவானது. மேலும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியதாகவே அக்கட்சியின் தோற்றம் அமைந்தது.
குறித்த கட்சியை உருவாக்குவதில் சிவராமன் என்கின்ற தராக்கியே முக்கிய பங்கு வகித்தார். முதன் முதலில் அவரே குறித்த கட்சியின் தோற்றம் பற்றி என்னிடம் கதைத்தார். அதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆயினும் தனிக் கட்சியொன்றை நிறுவுவதற்கும் நான் விரும்பவில்லை.
ஏனெனில் அப்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் யுத்தக் கொடூரங்களைத் தணிக்கவும் பாதிக்கப்டுகின்ற மக்களுக்கு உதவி செய்யவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய தேவையிருந்தது. எனவே அக்காலப்பகுதியில் அந்த வாய்ப்பினை நான் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
மேலும் கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாகக் கூறியுள்ளேன். அதாவது, ஒருபோதும் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதைத் தெரிவித்துள்ளேன். அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலிலும் நான் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட எனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என சிலர் குறிப்பிடுகினறனர். அது உண்மைக்குப் புறம்பான விடயம்.தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்னை வேண்டிக்கொண்டது. எனினும் நானே விலகிக்கொண்டேன்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமைத்துவத்திற்குப் பின் னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தங்களை புறந்தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறதே….
பதில்: அவ்வாறில்லை. அக்கட்சி என் னை புறந்தள்ளவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுங்கு செய்யும்போது ஏற்கனவே நான் கட்சியில் வகித்த பதவியையே அவர் எனக்கு வழங்கினார். அத்துடன் மத்திய குழு உறுப்பினராகவும் என்னை அமர்த்தினார். தற்போதும் நான் மத்திய குழு உறுப்பினராகவே நான் பதவி வகிக்கிறேன். கட்சிக்குள் எனக்கு எவ்விதமான அழுத்தங்களும் இல்லை.
கேள்வி: தேர்தலில் போட்டியிடாமல் தாங் கள் ஒதுங்கிக்கொள்வதற்கான காரணம் என்ன?
பதில்: பேரினவாதக் கட்சியொன்றில் போட்டியிட்டு வெற்றிபெறுவதென்பது சுலபமான விடயமல்ல. தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்டு வெற்றியீட்டும் சூழலை உருவாக்குவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.
அது தொடர்பில் தற்போது மக்கள் மத்தியில் தெளிவினை ஏற்படுத்துவது சுலபமான விடயமல்ல. மேலும் ஒரு தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும்போது அக்கட்சியின் கொள்கைக்கேற்பவே நாம் செயற்பட வேண்டும். அதனால் எமது கருத்துச் சுதந்திரம் மழுங்கடிக்கப்படுவதற்கான வாய்புகளும் உள்ளன.
ஏனெனில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், தனக்கு தற்போதுள்ள கட்சியுடன் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டின் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி மற்றுமொரு புதிய கட்சியை உருவாக்குவதே. நான் அதனை விரும்பவில்லை.
அதனால்தான் தமிழ் கட்சிகளில் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தெரிவு செய்தேன். ஆகவே அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். வெகு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.எனவே தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறமுடியாது. எனது விருப்பத்தை மாத்திரமே தெரிவித்துள்ளேன்.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இற்றை வரைக்கும் காந்திய வழியில் ஜனநாயகத்தைப் போதிக்கின்ற ஒரு கட்சி. அக்கட்சி ஒரு நாளும் யுத்தத்தை ஆதரிக்கவில்லை.
யுத்தத்தை எதிர்த்தே வந்தள்ளது. அதனால்தான் அக்கட்சி மழுங்கடிக்கபட்டு வந்துள்ளது. யுத் தத்தை எதிர்த்ததனால்தான் அமிர்தலிங் கம், சிவசிதம்பரம், நீலம்திருச்செல்வம் போன்ற தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
ஆகவே தமிழர்கள் மத்தியில் பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் புத்துயிர்கொடுத்து வளர்க்க வேண்டும் என்பது எனது நோக்கம். வடகிழக்கில் முன்னைய காலத்தில் குறித்த கட்சி தமிழ் முஸ்லிம் மக்களுக்கான கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியூடாகத்தான் அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தார். தற்போதைய எதிர் கட்சித் தலைவரும் அக்கட்சியூடாகவே தெரிவு செய்யப்பட்டவர்.
கேள்வி: பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெறுவதென்பது சுலபமான விடயமல்ல என்று குறிப்பிட்டீர்கள். எனவே தற்போதைய நிலை யில் தமிழர்கள் மத்தியில் பலம்பொருந்திய கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தங்களின் அரசியல் பயணத்தை தொடர்வதற்கு முனையவில்லையா?
பதில்: தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செல்வதற்கு நான் விரும்பவில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியல்ல. அக்கட்சியினைப் பதிவு செய்வதிலேயே பிரச்சினையுள்ளது. அது தொடர்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துள்ளது.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சரைக்கூட அக்கட்சி உதாசீனம் செய்வது போல் தெரிகிறது. எனினும் வடமாகாண முதலமைச்சர் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட வாக்குகளை மதித்து சிறந்த முறையில் சேவையாற்றிக்கொண்டிருக்கிறார். அந்த விடயத்தில் அவரை பாராட்ட வேண்டியுள்ளது. மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் இனவாதத்தையே பேசுகிறது.
கேள்வி: சிவராம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முனைந்தமைக்கான பின்னணி என்ன?
பதில்: அவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் ஒரு கல்விமான். அத்துடன் புௌாட் இயக்கத்தின் ஆரம்ப காலப் போராளி. இறுதியில் அவ்வியக்கத்தினாலேயே அவர் கொல்லப் பட்டார். அவர் விடுதலைப் புலிகள் இயக் கத்துடன் நன்கு தொடர்பைப் பேணி வந்தார். அவர் என்னிடமே அதிக தொடர் பினைக் வைத்துக்கொண்டார். தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு அவர் பின்வரும் ஆலோசனையைக் கூறி னார்.
அதாவது ஐரிஸ் நாட்டில் ஆயுதப்போ ராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஜெரிஅடம்ஸ் தலைமையில் அப் போராட்டத்திற்கு ஆதரவான ‘சிம்பெய்ன்’ என்கின்ற அரசியல் கட்சி பாராளுமன்றில் இருந்தது. அதேபோல் நாமும் இங்கு போராடும் போது எமக்கான அரசியல் கட்சியொன்று பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் வகிக்க வேண்டும் என்பதற் காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கபட்டது.
கேள்வி: தாங்கள் பிரதியமைசசர் பதவி வகித்த கடந்த அரசாங்க ஆட்சி யின்போதே தமிழ் மக்களுக்கு அதிகளா வன நெருக்கடிகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகி றதே….
பதில்: அவ்வாறில்லை. அதாவது போர்க் குற்றம் என்கின்ற விடயத்தை வேறாக நோக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு சில கட்டங்களில் நன்றி தெரிவிக்கவும் கட மைப்பட்டுள்ளோம்.
ஏனெனில், விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள பன்னிரெண்டாயிரம் போரா ளிகள் சரணடைந்தார்கள். அப் போது நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் அவர்களை விடுதலை செய்யு மாறு கேட்டுக்கொண்டேன். அதற்கி ணங்க சரணடைந்த 11,700 போராளி களை வழக்குப் பதிவு செய்யாமல் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷ விடுதலை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் புனவாழ்வளிக்கப்பட்டு இன்று சுதந்திர மாக வாழ்கிறார்கள்.
எனினும் அரசியல் கைதிகளாக சிறை யில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் இந்த அரசாங்கத்தில் இழுபறி நிலையே காணப்படுகிறது. மேலும் அரசியல் கைதிகளாக சிறையில் இருப்பவர்களில் ஏராளமானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களல்ல.
98 சதவீதமானோர் அப்பாவிகளாகவே உள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சியின்போது அரசியல் தைிகளின் விடுதலை தொடர்பாக நான் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய போதும் அப்போதைய சூழ்நிலையில் அது முடியாமல் போய்விட்டது.
நேர்காணல்:– எம்.சி.நஜிமுதீன் படப்பிடிப்பு:– எம்.எஸ்.சலீம்