யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும்.

306

 

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.

tna-leaders-5-party2-300x296

chandrika_eprlf_1986

இந்திய அரசின் தலையீடும் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் விடுதலை இயக்கங்களை வெற்று இராணுவக் குழுக்களாக மாற்றியமைத்திருந்தன. இந்த இராணுவக் குழுக்கள் தமது குழு நிலை நலன்களைப் பேணிக் கொள்வதற்காக தமக்கிடையே மோதிக்கொண்டன. தாமே சிறந்தவர்கள் என அறிவிப்பதற்கு ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒவ்வொரு பிரச்சார நியாயம் இருந்தது. புலிகளோ தாமே முதலில் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆக, தம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என ஆண்டபரம்பரை ஆணவத்தோடு கூறினர். ஏனைய இயக்கங்களும் இராணுவக் குழுக்கள் என்ற வகையில் இவ்வகையான நிலப்பிரபுத்துவக் குழுவாத போக்குகளில் மூழ்கியிருந்தனர்.

அன்று 1986 ஏப்பிரல் மாதத்தின் கடைசிப்பகுதி – 29 ம் திகதி காலை, எப்போதும் போல விடியவில்லை. ஆங்காங்கே துப்பாக்கிப் சத்தங்கள் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எதோ ஒரு பயங்கரத்தை அறிவித்தது. வேப்ப மரங்களைக் கடந்து தெருமுனைக்கு வந்து விசாரணை செய்ததில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டை நடக்கிறது என்றார்கள்.

ஒரு பல்கலைக்கழகம் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்க முடியாது. அந்தவகையில், தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களில் தீர்க்கமான பங்கு வகித்த பெருமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திற்கு உண்டு. அங்கே சென்றால் தகவல்கள் தெரியாலாம் என எனது சைக்கிளில் பல்கலைகழகத்திற்குச் செல்கிறேன். ஒவ்வொரு மூலையிலும் பலர் கூடியிருக்கிறார்கள். டெலோ இயக்கத்தைப் புலிகள் அழித்துக்கொண்டிருகிறார்கள் என்ற தகவல் பரவாலகப் பேசப்படுகிறது. இனந்தெரியாத சோகம் அனைவரது முகங்களிலும் படர்ந்திருக்கிறது. டெலோவின் பிரதான இராணுவத் தளங்கள் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் புறநகர், கள்வியன்காட்டு கட்டப்பிராய் ஆகிய அருகருகேயான பகுதிகளை நோக்கிப் புலிகள் நகர்வதாகத் தகவல்கள் வருகின்றன.

அதிகாலையைக் கடந்துகொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இரண்டு பேரைப் புலிகள் உயிரோடு எரித்த தகவல்கள் மனிதாபிமானத்தின் உயிரை விசாரணை செய்தது.

நானும் வேறு சிலரும் அங்கே சென்று விசாரிக்கிறோம். ஆடியபாதம் வீதியில் தான் அந்தக் கோரம் நடந்திருந்தது. திருநெல்வேலிச் சந்தைச் சைக்கிள் தரிப்பகத்தைப் TELO நடத்திக்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 வயதளவிலான சிறுவர்கள் அதற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்த புலிகள் சில மீட்டர் தூரம் வரை கொண்டுசென்று அங்கே அவர்களை எரித்திருக்கிறார்கள்.

நான் இளைஞன்.  அவலங்களையும், அதிர்ச்சிகளையும் உள்வாங்கிக்கொள்ளும் மனோபக்குவும் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை.

பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வருகிறோம். டெலோ இயக்கப் போராளிகளுக்கு பயப் பீதியை ஏற்படுத்தும் நோக்கிலேயே உயிருடன் எரித்ததாக புலிகளின் முக்கிய உறுப்பினர் தனக்குக் கூறினார் என்று உதவி விரிவுரையாளர் மு,திருநாவுக்கரசு எமக்குக் கூறுகிறார். புலிகளை விமர்சன அடிப்படையிலேயே ஆதரிப்பதாக எப்போதும் கூறும் திருநாவுக்கரசு, நாம் இவை குறித்துப் பேசினால் கொல்லப்படுவதற்கான அபாயம் உருவாகலாம் என எச்சரிக்கிறார்.

மதியம் கடந்த வேளையில் நான் சில பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்திக்கிறேன். அவ்வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தவுடன் சிவத்தம்பி அரசியல் தொடர்புகளைப் பேணிவந்தார். சிவத்தமபியிடம் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுகிறோம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு, பல்கலைக் கழகத்தில் உடனடி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதனைத்தொடர்ந்து புலிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்க தான் முன்வருவதாகக் கூறினார்.

அதற்காக டெலோ இயக்கம் இன்னமும் பலத்துடன் நிலைகொண்டுள்ள கள்வியன்காட்டுப் பகுதியில் கார்த்திகேசு மாஸ்டர் என்பவர் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவரைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தால் அவரோடு ஏனையவர்களும் இணைந்துகொள்ளலாம் என்றார்.

அவரை அழைத்துவருவதற்கு நானும் யோகன் என்பவரும் இணக்கம் தெரிவிக்கிறோம். யோகனை எனக்கு நன்கு அறிமுகமில்லாதவர். புலிகளின் ஆதரவாளர். அவரது மூத்த சகோதரர் புளட் அமைப்பின் அரசியல் பிரிவில் காண்டீபன் என்ற பெயரில் செயற்பட்டவர்.

நாங்கள் கார்த்திகேசு மாஸ்டரை அழைத்துவரப் புறப்பட்ட வேளையில் டெலோ இயக்கத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். கள்வியன்காடு பகுதியில் மட்டும் டெலோ இயக்கம் எதிர்த்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்து. அங்கு டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் தங்கியிருந்ததால் இராணுவ பலமும் அதிகமாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

கள்வியன்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் சட்டநாதர் கோவில் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியவாறிருந்தனர். அவர்கள் முதலில் எங்களைக் கைது செய்து விசாரணை செய்கின்றனர். யோகன், சிவத்தம்பி ஆகியோர் மீது அதிக சந்தேகம் கொள்ளவில்லை என்பதால் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.

புலிகள் இயக்கத்தின் நிலைகளைத் தாண்டிச் செல்லும் போது டெலோ இயக்கத்தினர் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர். நாங்கள் ஏற்கனவே தயார்செய்திருந்த வெள்ளைத் துணிகளை உயர்த்திக் காட்டுகிறோம். கொல்லப்படுகின்ற அவலங்களைப் பார்த்த எங்களுக்கு எமது உயிர் மீது கூட வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருவாறு கள்வியன்காட்டை அடைந்ததும், டெலோ இயக்கப் போராளிகளிடம் எமது நோக்கத்தைச் சொல்கிறோம். அவர்கள் எங்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்றும், இறுதி மூச்சுவரை போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.

மிகுந்த ஏமாற்றத்துடன் நாங்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை நோக்கித் திரும்பிவருகிறோம். சிவத்தம்பி அப்போது அங்கிருக்கவில்லை. அவருக்காகக் சில மணிநேரங்கள் காத்திருக்கிறோம். டெலோ இயக்கம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்ட செய்தியோடு அவரும் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் வேறு சில முக்கிய உறுப்பினர்களோடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பலர் கொல்லப்பட்டும் கைதுசெய்யப்பட்டுமிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

1983ம் ஆண்டில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உருவான தேசிய எழுச்சியோடு நான் டெலோவில் இணைந்துகொண்டேன். பின்னதாக டெலோவில் மத்திய குழுவை உருவாக்கி ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்று நடைபெற்ற போராட்டங்களில் நானும் இணைந்து கொண்டேன். ஆக, ஆறு மாதங்கள் வரை அவ்வமைப்பின் செயற்பாடுகளோடு இணைந்திருந்தேன். பின்னதாக முன்று மாதங்கள் வரை தொடர்ந்த உட்கட்சிப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் டெலோ இயக்கத்தினர் கொலை செய்வதற்காக என்னையும் தேடியலைந்தனர். உட்கட்சிப் போராட்டம் உச்சமடைந்திருந்த வேளையில் சிறீ சபாரத்தினத்தைச் சந்திப்பதற்காக வெறு சிலரோடு, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முக்கிய உறுப்பினரன கபூர் என்பவரின் ஒழுங்குபடுத்தலில் சென்னைக்குச் சென்றோம்.

நாளாந்தப் பத்திரிகைகள் கூடப் படிக்காத குறைந்தபட்ச அரசியல் அறிவுமற்றவராக சிறீ சபாரத்தினத்தை நாம் சந்தித்த போது ஏற்பட்ட அதிர்ச்சி பல ஆண்டுகள் நீடித்தது.

டெலோ இயக்கம் அழிக்கப்பட்ட போது, சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், எதிர்த்துப் போராடியவர்கள் என்று சற்றேறக்குறைய 400 டெலொ இயக்கப் போராளிகள் அழிக்கப்படிருக்கலாம் என்று பின்னதாகத் தகவல்கள் வெளியாகின.

சிறீ சபாரத்தினம் கோண்ட்டாவில் பகுதியிலுள்ள அன்னங்கை என்னுமிடத்தில் மறைந்திருந்தார். புலிகள் அவரைத் தேடிப் பல இடங்களைச் சுற்றிவளைத்தனர். பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். வசதி படைத்தவர்கள் கொழும்பிற்கும், சிலர் இந்தியாவிற்கும் தப்பியோடினர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் மாற்று வழிகள் இன்மையால் கைதுசெய்யப்படுக் கொலைசெய்யப்பட்டனர்.

இறுதியாக மே 5ம் திகதி சிறீ சபாரத்தினம் தலைமறைவாக இருந்த பகுதி புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரைகிப் போகின்றார்.

பின்னதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்த கபூர் அந்த இயக்கத்தின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தைப் புலிகளுக்குக் காட்டிக்கொடுத்தது ஈரோஸ் இயக்கம் என்று தனக்குச் சந்தேகமிருப்பதாக அவர் என்னோடு பேசும் போது ஒரு தடவை தெரிவித்தார்.

சிறீ சபாரத்தினதின் மறைவிடம் அவர் கொலைசெய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் அவரை மீட்டு இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். இறுதியில் கோண்டாவிலில் இருந்து அவரை அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈரோஸ் இயக்கத்தையும் ஈடுபடுத்த எண்ணிய ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை அவர்களிடம் அது குறித்துப் பேசியதாகவும், இரு இயக்கங்களும் இணைந்து வைக்கல் நிரப்பிய லொறி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாகவும் கூறினார். வைக்கல் நிரப்பப்பட்ட லொறி சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தை அண்மித்ததும் பழுதடைந்து நின்றுவிட்டதாகவும், அதன் பின்னர் அரை மணி நேரத்திற்குள்ளாக சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்திற்குப் புலிகள் சென்று அவரைப் படுகொலை செய்ததாகவும் கூறினார்.

ஈரோஸ் இயக்கத்தில் அதன் தலைவர் பாலகுமார் ஊடாகவே தொடர்புகளைப் பேணியதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் அதன் உளவுப் பிரிவிற்குத் பொறுப்பாகவிருந்த ஜேம்ஸ் என்பவரே மீட்பு முயற்சியை ஒழுங்கு செய்ததாகவும் அறியக் கூடியதாகவிருந்தது.

சிறீ சபாரத்தினம் மரணித்த செய்தி வெளியான போது அதற்காகக் கண்ணீர்வடிக்க முடியவில்லை. நாம் ஏன் கொல்லப்படுகிறோம் என அறியாமலே மரணித்துப் போன நூற்றுக்கான போராளிகள் கொசுக்கள் போலச் சாகடிக்கப்பட போது, இதயம் கனத்தது.

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை.

அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது.

இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா.

தவறுகளைக சாவகாசமாகக் கடந்து சென்று மனிதாபிமானமற்ற கோரத்தனமான சமூகத்தைத் தோற்றுவிக்க நாம் காரணமாகிவிடக்கூடாது.

ஒவ்வொரு தவறுகளையும் எமது எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு முழுப் போராட்டமும் தவறு என நியாயப்படுத்துவதற்கான வழிகளை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

புலிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் நூலிடை இடைவெளி தான் காணப்படுகிறது. இரு பிரிவினருமே குறைந்தபட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் தமது சொந்த நலன் சார்ந்த உணர்ச்சி அரசியலையே முன்வைக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் இவ்விரு பிரிவினருமே எங்காவது ஒரு அதிகாரவர்க்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டையே வரித்துக்கொள்கின்றனர். தாம் சார்ந்த குறுகிய நலன்களை நோக்கி அரசியல் தலைமையற்ற ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணையக் கோருகின்றனர். இறந்துபோன காலத்தின் அவலங்களை மறுபடி பேசுவதெல்லாம் இந்த இரண்டுக்கும் அப்பாலான புதிய அரசியல் சிந்தனையை உருவாக்குமானால் தெற்காசியாவின் தென் மூலையிலிருந்து புரட்சிக்கான வேர்கள் படர வாய்ப்புக்களுண்டு.

  1. ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் வாசுதேவன் ஆற்றிய உரை.

    மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்.
    மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

    தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!

    பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று விடுதலைப் புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்! தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.

    தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!

    நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.

    அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார். சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.

    எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…

    சரியாக 22 ஆண்டுகள் கழித்து 2009 மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!

    அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!

    25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை. கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.

    இன்று நானும் ஒரு துரோகி! காரணம் நான் பழசை கிளறுகிறேனாம். நாம் செய்வதெல்லாவற்றையும் கூட்டி அப்படியே மறைத்து விட வேண்டும்! அதை சும்மா கிளறுவதால் என்ன பயன்? செய்தவர்கள் இன்று இல்லை! ஆனால் உவன் மகிந்தனை விடக்கூடாது. இவர்கள் எல்லாம் இன்றும் மறக்கும் ஒரு விடயம் எவன் ஒருவன் தனது கடந்தகாலத்தை மறக்கிறானோ அவன் மீண்டும் அதையே செய்ய முயல்வான் என்பதே!

    எம் தமிழ் தலைமைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை தமது அதிகாரங்களை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய மக்கள் நலன் மீது எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. இவ்வளவு அவலம் வந்து முடிந்த பின்னரும் ஒரு மீளாய்வுக்கு தயார் இல்லை!

    அவசர அவசரமாக கட்சி கட்டுவதிலும் தேர்தல் வைப்பதிலும் குறியாக இருக்கின்றனர். ஜனநாயகப் பண்புகள் அற்ற அமைப்புகளை கட்டியெளுப்புவதுடன் ஆயுதங்களை விட பலமான ஊடகங்கள் இன்று கைகளில் வைத்துக் கோண்டு ஆராஜகம் செய்து வருகின்றனர். உண்மைகள் மக்களிடம் போனால் செல்வாக்கு போய்விடும் என்ற பயத்தில் சுயநலம் கொண்ட மிருகங்களாக மாறி நடந்து மடிந்த போரில் குற்றுயுரும் குலை உயிருமாக தப்பியவர்களின் நியாயமான கோபங்கள் ஆதங்கங்கள் பேன்றவற்றை இன்று உயிருடன் குழிதோண்டிப் புதைக்கின்றனர். அந்த மக்களின் பட்டினிச் சாவில் இன்று தம் வெட்கங்கெட்ட அரசியலை செய்கின்றனர்.

    50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.

    காலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்?

    காலணித்துவ ஆட்சியின் பின் இலங்கையில் இனங்களிற்கிடையிலான சந்தேகங்களை வைத்து அரசியல் செய்த தமிழ் சிங்கள தலைமைகள் தான் இனவாத அரசியலைத் தோற்றுவித்தன. இதே சந்தேகங்கள்தான் இன்று எம் எல்லாரிடமும் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்தும் வருகிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இலங்கை என்ற அழகிய தீவில் மக்கள் என்றுமே நிம்மதியாக வாழ முடியாது.

    புலம்பெயர் மண்ணில் வாழும் மக்கள் இன்று ஆத்திரம் கொண்டவர்களாகவும் பழிக்கு பழி என்ற சிந்தனையை மட்டுமே தம்முள் வைத்தபடி இனவாத அரசியலை வளர்த்து வருகிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளிற்கு இவர்கள் இன்னமும் தீனி போட்ட வண்ணமுள்ளனர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும் என்பதை பற்றியெல்லாம் இவர்களிற்கு கவலை இல்லை! நான் குருடானாலும் பரவாயில்லை என் எதிரியை குருடாக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறது.

    இன்று இந்த நிகழ்வு நடைபெறுவது கூட பலருக்கு தெரியாது. தெரிந்தாலும் அது பற்றி அக்கறையில்லை! இதுதான் எம் சமூகத்தின் சாபக்கேடு. தம் தவறுகளை திருத்த முயலாதவர்கள் எப்படி அடுத்தவனை திருந்தச்சொல்ல முடியும்?

    யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தள்ளது. புலம்பெயர் மண்ணில் உள்ளவர்கள் முதலில் தங்கள் கோபங்கள் ஆத்திரங்களை மறக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில் நடந்த ஒவ்வொரு விடயங்களையும் பக்க சார்பற்று நேர்மையுடன் திரும்பி பார்க்க வேண்டும். தாம் விட்ட தவறுகளிற்கு மன்னிப்பு கோர வேண்டும். தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாது அந்த தவறு திரும்பவும் நடைபெறாதிருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் முதலில் மன்னிக்க தயாராக வேண்டும். தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற நிறவெறிப் போராட்ட முடிவு இன்று எமக்க ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.

    இலங்கையர் அனைவரும் தான் சாராத இன மத கலாச்சாரங்கள் இலங்கையின் ஒரு கொடை என்பதை உள்வாங்க வேண்டும். அதையும் பாதுகாத்து வளர்ப்பது எமது கடமை என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். இதன் முலமாக இனங்களிற்கிடையிலான உறவு மேம்படுவதுடன் இன விரேதாங்களும் சந்தேகங்களும் அற்றுப்போகும் ஒரு சூழல் உருவாகும்.

    இதற்கு எல்லா இயக்கங்களிலுமிருந்து போராட சென்று மரணித்தவர்களை ஒன்றாக நினைவு கூர நாம் ஒரு பொதுவான தினத்தை தெரிந்தெடுக்க வேண்டும். இந்த தினம் எமது கடந்தகால இயக்க மோதல் காயங்களிற்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு தினமாக அமையவேண்டும். அன்று அனைவரும் தாம் முன்விட்ட பிழைகளை நேர்மையுடன் மனம் விட்டு பேச வேண்டும்.

    எமது போராட்டத்திற்கு தலைமை வகித்த எல்லா தலைவர்களும் இன்று எம்முடன் இல்லை. அவர்கள் யாருமே தம் தவறுகளிற்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் இந்த நாளில் நான் சார்ந்த அமைப்பு செய்த சகல தவறுகளிற்கும் அந்த அமைப்பில் ஒரு காலத்தில் இருந்தவன் என்ற முறையிலும் இதனால் அன்று நான் செய்திருக்க கூடிய சகல தவறுகளிற்கும் இன்று உங்களிடம் ஒரு பொது மன்னிப்பை கோருகிறேன்.

    உலகில் மாற்றம் வரவேண்டுமாயின் அது உன்னுள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வாசகத்துடன் எனது உரையை முடிக்கிறேன்.

  2. வரலாற்றீன் பதிவு மனதை நெருடுகிறது,சொந்தச் சகோதரரே நம் சொந்தங்கள சூறயாடிய சோகமான நாடகங்கள் மனதை விட்டு விலகாமல் தொடர்கின்றன.

  3. சுந்தரம் படுகொலை, சுழிபுரம் கூட்டுப் படுகொலை, தாஸ் படுகொலை, அமீன் படுகொலை இந்தியாவில் நடந்த உட்கட்சி படுகொலை இவற்றை எல்லாம் தாண்டி டெலோ மீதான கூட்டுப் படுகொலை இவற்றை இன்றைய முள்ளிவாய்க்கால் அவலத்துடன் ஒத்துப் பார்கிறேன் அவலங்களுக்கு தங்க முலாம் பூச முடியாது கேட்ட அவலம் நல்ல அவலம் என்று எதுவும் கிடையாது. பருத்தித்துறை ஆனை விழுந்தான் சுடலை 1986 ஏப்ரல் மாதம் டெலோ போராளிகளின் கண்கள் கைகள் கட்டப் பட்ட உடலங்களால் நிரம்பி வழிந்தது தலை வெளியிலும் கால் கை வெளியில் தெரிந்த உடலங்களில் மண்ணையும் சுண்ணாம்பு கல்லையும் தூக்கி வைத்துவிட்டு கனத்த இதயங்களுடன் வீடு சென்றேன். 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை பார்க்கும் போதும் அதே எண்ணமும் கவலையும் ஏற்படுகிறது. கைகள், கண்கள் கட்டப்பட்டு அனாதைப் பிணங்களாய்…. அன்று எங்களை சுடாதயுங்கோ என்று அலறிய அவலம் மணல் காடு கடல் வரை தெறித்து இருக்கும். 1990 இலும் அவர்கள் அரைகுறையாக புதைக்கப் பட்ட இடங்களில் மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் பார்க்க கூடியதாக இருந்தது. அன்று தமிழிலே அவர்கள் எழுப்பிய அவலம் எம்மவர் காதில் விழவில்லை. இன்று இவர்கள் எழுப்பிய அவலம் சிங்களவன் காதில் விழவில்லையா என்று எனது சமச்சீரற்ற எண்ணம் கவலைப் படுகிறது . 1987 கிழக்கில் ஒரு சில நாட்களில் நூற்றுக்கு மேற்பட்ட பிளாட் பழைய போராளிகள் அவர்களது வீடுகளில் வைத்தே சுடப் பட்டனர், வவுனியா மன்னார் பகுதியில் பிளாட், EPRLF அமைப்பில் இருந்து விலகியவர்கள் செயல் பட்டவர்கள் என பலநூறுபேர் பொது இடங்கள் வீடுகளில் வைத்துச் சுடப் பட்டனர். இவற்றை விஞ்சிய பொத்துவில் திருக்கோவில், நரிப்புல்மலை, தீவுச்சேனை, வெலிகந்தை பகுதியில் சரணடைந்த அல்லது சிறைபிட்டிகப் பட்ட நூற்றுகணக்கான TNA உறுப்பினர்கள் காடுகளில் உள்ள மாட்டு படிகளில் அடைக்கப் பட்டு கூட கூட்டுபடுகொலை செய்யப் பட்டனர். அவலங்கள் பேசப்படவேண்டும் அவை ஆசுவாசப் படுத்தப் படவேண்டும் சமுகத்தில் மேலும் மீள் எழாமல் பார்த்து கொள்ளப் பட வேண்டும். இந்த அவலங்கள் இனியேனும் மிக அவதானமாகவும் நிதானத்துடனும் பேசப் பட்டால் நாம் எமது விடுதலையில் பல தடைகளை கடக்க முடியும். நம்மத்தியில் நடந்த அவலங்களை பேசுவது என்பது முள்ளிவாய்காலில் நடந்த அவலங்களை கொச்சை படுத்தவோ, நிராகரிக்கவோ, நியாயப் படுத்தவோ பயன் படுத்த அல்ல என்பதை அனைவரும் புரிந்து

SHARE