ரஸ்ய விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோவில் உள்ள ரஸ்ய தூதரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
224 பயணிகளுடன் பயணித்த ரஷ்ய வானுர்தி ஒன்று எகிப்து மத்திய சினாய் குடா பகுதியில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வானுர்தி மத்திய சினாய் குடாவின் எல்லையை கடந்ததன் பின்னர் வானுர்தியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும், காணாமல் போனதாக கூறப்படும் வானுர்தி பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யாவை மேற்கோள் காட்டி சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, ஏ – 321 ரக ரஷ்ய வானுர்தி சினாய் குடா பகுதியில் அனர்த்திற்கு உள்ளானமையை எகிப்திய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த வானுர்தி எகிப்தில் இருந்து ரஷ்யா – புனித பீட்டர்ஸ்பேர்க் பகுதியை நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வானுர்தி விபத்துக்குள்ளான பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகளை முன் எடுக்குமாறு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை முன் எடுக்குமாறும் அவர் பணித்துள்ளார்.
Update: Saturday, 31 October 2015 – 19:01
—————————————————–
ரஸ்ய விமானம் விபத்துக்குள்ளானது!
இன்று காணாமல் போன ரஸ்ய விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்திய பிரதமரை மேற்கோள்காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது 217 பயணிகள் மற்றும் 7 விமான பணியாளர்கள் வரை விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எமது முன்னைய செய்தி
ரஸ்ய விமானமொன்று எகிப்தின் சினாய் தீபகற்பம் பகுதியில் காணாமல் போயுள்ளது.
இதன்போது விமானத்தில் 200 பயணிகள் இருந்த தாகவும் வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் வெவ்வேறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எகிப்தின் Sharm al-Sheikh நகரில் இருந்து புறப்பட்ட விமானம் , அந்நாட்டு கட்டுப்பாட்டறையுடனான தொடர்பை இழந்ததாகவும் , ஆனால் துருக்கி நாட்டின் விமான கட்டுப்பாட்டு பிரிவுடன் தொடர்பு கொண்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
எனினும் விமானம் எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் விபத்துக்குள்ளானதாக வேறொரு தகவலும் , விமானம் சைப்பிரஸில் காணாமல் போனதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளதாக பி.பி.சி. தெரிவிக்கின்றது.
விமானத்தில் இருந்தோரில் அதிகமானோர் ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.