ரெய்னாவின் அதிரடியில் மீண்டும் வெற்றிக்கணக்கை தொடங்கிய சென்னை…

362
பெங்களூர் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நடப்பு ஐ.பி.எல் தொடரின் 20வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டுவைன் ஸ்மித் 39 ஓட்டங்களும், பிரெண்டன் மெக்கல்லம் 4 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரெய்னா அரைசதம் கடந்து 62 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 13 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் டுபிளசிஸ் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்தது.

பந்துவீச்சில் பெங்களூர் சார்பில் யுஸ்வேந்திரா 3 விக்கெட்டும், இக்பால் அப்துல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 182 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மன்விந்தர் பிஸ்லா 17 ஓட்டங்களும், ருசோவ் 14 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கோஹ்லி அரைசதம் கடந்து 51 ஓட்டங்களும், டேவிட் வீஸ் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் சென்னை சார்பில் ஆசிஷ் நெக்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா தெரிவானார்.

SHARE