வடக்கில் வாக்குகளைப் பெறுவது சவால்! கூட்டமைப்புக்கு ஐ.தே.க அழைப்பு-நிதானமாக சிந்திக்கும் சம்பந்தன்

425

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என ஐ.தே.க அழைப்பு விடுத்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் குதிப்பது முட்டாள்தனமான செயல். பௌத்த சிங்கள வாக்குகள் இரு தரப்பினருக்குமே கிடைக்கும். ஆனால், சிறுபான்மை மக்களின் வாக்குகள் எவரேனும் ஒரு தரப்பினையே பிரதிநிதித்துவப்படுத்தும்.

அதன் காரணத்தினாலேயே அரசு வடக்கின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் அரசின் மீதான அதிருப்தியில் இருக்கின்றமை அரசுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அரசுக்கு இல்லை என்பதும் அரசுக்குத் தெரியும்.

எனவே, சிறுபான்மை மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதே அரசுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இருக்கும் சவாலாகும். அதேபோல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதே அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் தெரிவிக்காதுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பது இந்த அரசினால். வடக்கில் இராணுவ ஆட்சி நடத்தப்படுவதும் இந்த அரசினால்.

எனினும், இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்துள்ளது. தற்போது பொது எதிரணியை நாம் உருவாக்கி வருகின்றோம்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் உதவிகளும் எமக்குத் தேவைப்படுகின்றது. அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதும் எமது பொது எதிரணியின் ஒரு கோரிக்கையே. அதனைப் பலப்படுத்த – தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

SHARE