விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரணி படைப்பிரிவின் இன்னிசைக்குழுவின் இசைகக் கலைஞனாக இருந்தவரும், “இன்இசைஞன்” என புலிகள் அமைப்பினால் அழைக்கப்பட்டவருமான நகுலேந்திரன் நிமால் அவர்கள் இறுதி யுத்தத்தின் போது 2008.08.01 அன்று மல்லாவியில் வைத்து காயமடைந்து கால்கள் இரண்டையும் இழந்த நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலும் அவருக்குள் இருக்கும் இசை ஆர்வம் காரணமாக “இசைக் கலையகம்” ஒன்றினை அமைக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அவர் பாடகர் மாத்திரமல்லாது, ரம்ஸ், ஒக்டபாட் இசை வாத்தியக் கலைஞனாகவும் திகழ்வதனால் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் தனது இசைத்துறையினை மேம்படுத்துவதற்காக ஒரு தொகை நிதியுதவியையும் சுவிஸ் அகரம் பவுண்டேசன் சார்பில் சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை நிறுவனத்தினர் அதிரடி இணையத்தின் அனுசரணையில் வழங்கியுள்ளனர். (இவரது அண்மைய பாடல்கள் இரண்டின் வீடியோவும் கீழே இணைக்கப் பட்டுள்ளது) இவர் நிதியுதவியை விட, தனது இசைக்கலைக்குரிய பொருட்களை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தந்துதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். நகுலேந்திரன் நிமால் அவர்கள் தற்போது வலியின் வரிகள் என்னும் ஐந்து பாடல்கள் கொண்ட தொகுப்பினை இறுவெட்டாக வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தம்மிடம் உள்ள இசைக் கலையகத்துக்கு உரிய பொருட்களை, அதாவது ஒலிவாங்கி (மைக்) முதல் கொண்டு எதுவாக இருந்தாலும், அவர்கள் பாவித்த பொருட்களாக இருந்தாலும், தமக்கு தந்து உதவுமாறும் கேட்டுக் கொண்டதுடன்,தனக்கு உதவி செய்த அகரம் பவுண்டேசன், எல்லாளன் இறைச்சி கடை நிறுவனத்திற்கும், தனக்கு நேரில் வந்து உதவியை வழங்கிய புளொட் தலைவருக்கும், மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், “புளொட் தலைவர் குறித்து இயக்கத்தில் இருக்கும் போது கேள்விப்பட்டுள்ள போதிலும், இன்றுதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்து உள்ளதாகவும், சந்தித்த சில நிமிட அவருடனான உரையாடலிலேயே அவரது நேர்மையான உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும்” தெரிவித்தார். இவர் அங்கம் வகித்திருந்த சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் ராகசீலன் இசைக்குழுவில் இவருடன் பணியாற்றிய அனைவருமே யுத்த காலத்தில் தம்முயிரை இழந்துள்ள நிலையில் மேற்படி இன்னிசைக்குழுவைச் சேர்ந்த இவர் மாத்திரமே இன்னமும் எஞ்சியிருக்கின்றார். அதுவும் கால்கள் அற்ற நிலையில் வாழும் இவர் இசையின்மீது கொண்ட ஆர்வத்தினால் ஒரு இசைக் கலையகத்தை உருவாக்க வேண்டுமென்பதில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றார்!