20 ஆண்டுகள் சிறை தண்டனை எகிப்து அதிபருக்கு : காரணம் என்ன?

358
 

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக Mohammed Morsi பதவி வகித்தபோது, அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு கொலை செய்ததாக மொர்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதிபரின் மாளிகை வெளியே போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றபோது, கூட்டத்தை கலைக்குமாறு பொலிசாருக்கு மொர்ஸி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை பொலிசார் ஏற்க மறுத்ததால் மொர்ஸியின் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை (Muslim Brotherhood Movement) சேர்ந்த ஆதரவாளர்களை தூண்டிவிட்டு போராட்டக்காரர்களை அடக்கியுள்ளார்.

இதில், ஒரு ஊடகவியலாளர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, 2013 ஆண்டு மொர்ஸிக்கு எதிராக போராட்டம் வலுக்க தொடங்கியதால், அப்போதிய ராணுவ தளபதியான Abdul Fattah al-Sisi அதிரடியாக செயல்பட்டு மொர்ஸியை பதவியிலிருந்து இறக்கி அவர் அதிபரானார்.

மொர்ஸி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது செய்து சிறையில் அடைத்த இன்றைய அதிபர், மொர்ஸின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மொர்ஸி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 22 இஸ்லாமிய நபர்களுக்கும் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மொர்ஸி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றிற்கு மட்டும் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மீதுள்ள பிற குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும்போது இந்த தண்டனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

SHARE