321

 


மாணவர்களை இலக்கு வைத்து இராணுவத்தினரும் பொலிசாரும் நடாத்திய அராஜகம் வன்முறைகளை மக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள். இத்தாக்குதல்கள் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மட்டுமன்றி அனைத்து தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பதற்கான கொடூரத் தாக்குதல்களாகும். தமிழ் மக்கள் மீதான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை நீடிக்கப்பட்டு வருவதையே இது எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இலங்கையில் வெளியார் தலையீடுகள் ஏற்பட வழிதிறந்து விடுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து இன்று சர்வதேச விசாரணைகள் என்ற நிலைமையில் இருப்பதைக் கூட அரசு மறந்து விடுகின்றது. இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் இராணுவம் நிலை கொண்டிருப்பது தமிழ் மக்களின் மீதான இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்புக்களில் ஒன்றே என்பதை யாழ் பல்கலையில் நடைபெற்ற இராணுவ அத்துமீறல்கள் தெரியப்படுத்தியுள்ளது.

வடக்கு பிரதேசத்தில் இராணுவம் மக்களின் அபிவிருத்தி சேவைகளை செய்கின்றது என்ற பேய்க்காட்டல் மூன்று வருடங்களாக அரசினால் கூறப்பட்டு வந்துள்ள போதிலும் இராணுவத்தினரால் பௌத்தவிகாரைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் குவிப்பானது தமிழரை மிரட்டுவதற்காகவும் தேவைப்படும் போது தமிழ் இனப்படுகொலை புரிவதற்கான தயாரிப்பேயாகும்.

ஒருபுறம் புலிகளின் உறவினர்கள் மற்றும் தமிழ் மாணவர்களின் அஞ்சலி நிகழ்வை தடைசெய்யும் அரசு, மறுபுறம் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவங்களையும் அவர்கள் பாவித்த தளபாடங்களையும் வைத்து போர் கண்காட்சி நிலையங்களை அமைத்து சுற்றுலா மையம் நடாத்துகின்றது.

விடுதலைப்புலிகளை நாம் முற்றாக அழித்துவிட்டோம், நாட்டில் இனி பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பயங்கரவாதிகளை எப்படி அழித்தொழிப்பது என இதர நாடுகளுக்கு நாம் படிப்பிக்கத் தயார் என வெற்றிமுரசு கொட்டி மார்தட்டிக்கொண்ட மகிந்த அரசு இதனைச் சொல்லியே வாக்கு வங்கியை நிரப்பிக் கொண்டது. இன்று மூன்று வருடங்களே கடந்த நிலையில் தான் எதிர் கொள்ளும் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்க மீண்டும் புலி புலி என பூச்சாண்டி காட்டத் தொடங்கிவிட்டது.

மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் உரிமையை மறுப்பது ஜனநாயக மறுப்பாகும். அரசு ஏன் இதை தடைசெய்கின்றது என்பதை வெளிப்படுத்துமா?

 பல்கலையில் நடைபெற்ற ஒருசிறிய நிகழ்வான அஞ்சலி நிகழ்வை ஏன் அரசு பெரிது படுத்துகின்றது அரசுக்கு இதில் உள்ள லாபம்தான் என்ன? அது மட்டுமல்லாமல் மாணவர்களின் மீது போர்தொடுக்கும் நடவடிக்கைக்கான அடிப்படைக் காரணம் என்ன? கல்விக்கூடங்கள் மீதும், அப்பாவிகள் மீதும், மத ஸ்தலங்கள் மீதும், சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மீதும் போர் தொடுக்கும் வெட்கம் கெட்ட அரசியலை இலங்கையில் அரசு செய்கின்றது. மக்கள் இலகுவில் இவற்றை மறந்துவிடமாட்டார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் ஒருநாள் ஆட்சி இறங்கவே வேண்டியிருக்கும், அன்று மக்கள் இவர்களுக்கு எதிராகவே இருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

மக்கள் போரின் வடுக்களிலிருந்து வெளிவர வேண்டுமானால் மக்களை போரில் இழந்த தமது உறவுகளுக்காக அஞ்சலி பூசைகள் நினைவு தினக் கூட்டங்கள், நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்க வேண்டும், அரசு ஊக்குவிக்க வேண்டும். போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்த்தும் சம்பவமானது அரசினால் ஊக்குவிக்கப்பட்டு அந்த நினைவுகளிலிருந்து வெளிவரக்கூடியவாறு மாணவர்களையும் மக்களையும் பராமரிப்பதே அரசின் தலைமைத்துவத்தின் கடமையுமாகும். அதை விடுத்து மாணவர்கள் மீது போர்தொடுத்தது தவறானதும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். அரசினால் மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்களானது மக்களை மீண்டும் அரசுக்கு எதிராகவே திசை திருப்பும்.

தமிழ் மக்களின் மீது பொலிசாரினால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான வன்முறைகள், தமிழ் இளைஞர்களினால் பொலிசார் பழிவாங்கப்பட்டமை. பொது கூட்டங்களில், கழியாட்டங்களில் நடைபெற்ற பொலிசாரின் அட்டகாசங்கள் கொலைகளுடனேயே தமிழர் உரிமைப்போராட்டம் ஆரம்பமானதும் இதன் தொடர்ச்சியே இலங்கை அரசின் இராணுவ அடக்குமுறையாகவும் இருந்து போர் தொடர்ந்திருந்ததை அரசு மறந்தது ஏனோ?

இதனால் பல தமிழ் சிங்கள பொலிசாரின் மக்களின் உறவு முறைகள் பாதிக்கப்பட்டு, மக்கள் பொலீஸ் சேவையில் நம்பிக்கை இழந்திருந்தனர். பொலிசார் பொது மக்களின் நிர்வாக சேவைகளை ஆற்றும் பணிகளிலிருந்து அடக்கு முறையாளளர்களாக மாற்றம் பெற வைப்பதில் இலங்கையில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் செயற்ப்பட்டு வந்துள்ளமையினால் பொலிசார் மீது மக்கள் நம்பிக்கையற்று இருப்பது வெளிப்படையான விடயமாகும்.

தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் போரை ஆதரித்தமைக்கான காரணங்களை அரசு உணரத்தவறி மீண்டும் அராஜக நடவடிக்கைகளை தூண்டி விடுகின்றது. அராஜகங்களுக்கு எதிராக அன்றுபோல இன்றும் தமிழர் தரப்பில் எதிர்ப்பையே மக்கள் ஜனநாயக வழியில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்களின் மனதில் விட்டகலாத நினைவுகளில் போரினால் கொல்லப்பட்ட தமது உறவுகள் இனபந்துக்கள் புலிகள் என பலர் அடங்குவர். தாம் தமது விருப்பத்திற்கு ஏற்ப தமது மறைந்து போன உறவுகளுக்காக நினைவு தினத்தை அனுஸ்டிக்க மறுக்கும் இலங்கை அரசு எந்தவகையிலும் ஒரு ஜனநாயக அரசாக கருத முடியாது மாறாக அராஜக மனித உரிமைகளை மதிக்காத அரசேயாகும்.

தனது முள்ளிவாய்கால் வெற்றிகளை முழுசிங்கள மக்களின் வெற்றியாக இனவாதியின் உச்சநிலையிலிருந்து கொண்டாட்டங்களை நடாத்திய அரசு. இறந்தவர்களுக்காக அஞ்சலி செய்யும் உரிமையை தடைசெய்வது ஓடுக்குமுறையேயாகும். தமது வெற்றிகளை மட்டும் கொண்டாடும் அரசு தமது அன்புக்குரியவர்களின் இழப்பிற்காக அழுவதை தடைசெய்யும் அரசின் நடவடிக்கைகள் மனித பண்புக்கு ஏற்றதல்ல என்பதுடன் இப்படியான அராஜகங்கள் சிறிய வரலாற்றுக் காலங்களிலேயே வீழ்ந்ததை மறந்து செயற்படுவது தவறானதாகும்.

இன்று ஆட்சி போய் வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போது இந்த மாவீரர் நாள் யாழ் மண்ணில் வெகுவிமர்சையாக, இன்று புலம் பெயர்நாட்டில் அனுஸ்டிக்கப்படுவது போன்று அனுஸ்டிக்கப்படும். அன்றும், 1974ல் தமிழாராட்சி மாநாட்டில் மாநாட்டை குழப்ப அரசு எடுத்த முயற்சிகள் போல நடைபெறலாம், அரசின் அட்டூழியங்களை ஆதரிப்போர் குறிவைக்கப்படலாம், அதன் பின்னரும் தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற பட்டம் சூட்டப்படலாம். வரலாற்றை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களால் நாடு சின்னாபின்னப்படலாம் என்பதை இலங்கை அரசுக்கும் அண்மைய யாழ் பல்கலை சம்பவத்தை கண்டிக்காதவர்களுக்கும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டவே பலரும் விரும்புகின்றனர்.

இனங்களை பிரித்து வைத்து தனிமைப்படுத்தி அரசியலை செய்யக் கூடாது என்று ஒரு வகையில் அரசும் மறுபக்கத்தில் முற்போக்கு சக்திகளும் எதிர்பார்க்கும் இக்காலத்தில், யாழ் பல்கலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது தமிழ் மக்களை பிரித்து வழி நடாத்தி தமிழ் மக்களை பிரிந்தே நிற்க வைக்கும் செயலேயாகும்.

எதிர்கால சந்ததியினர் இன்று யாழ் மேயரின் அணுகு முறையையும் யாழ் பொலிசாரின் அராஜகத்தையும் ஈபிபிடிபின் நிலையையும் தமது கால வரலாற்றில் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் பின்னர் யாழ் பல்கலை மாணவர்களுக்கு நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வரலாற்று தவறேயாகும். அரசு தமிழ் மக்களிடம் இன்று வரையில் தனது சார்பில் தனது இராணுவத்தினரின் அராஜகங்களுக்கு மன்னிப்பு கேட்டது கிடையாது இது போன்றே யாழ் பல்கலை மாணவர்களிடமும் மன்னிப்பு கேட்குமா என்பது சந்தேகமேயாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பதவிகள் உள்விவகாரங்களில் நேரடியாக தலையீடுகள் செய்த ஈபிடிபியும் தோழர் டக்ளஸ் அவர்களும் அண்மைய யாழ் பல்கலைக்கழகத்தினுள் பொலிசாரின் காடைத்தனங்களை எப்படி பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளதுடன் இது ஈபிடிபி யும் தோழர் டக்ளஸ் அவர்கள் மக்களுக்காக செய்யும் மக்கள் சேவைகளின் நல் மதிப்பையும் கெடுக்கும் நிலை உள்ளது.

தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவிரும்பும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்ய தவறிய யாழ் மேயரும் ஈபிடிபியும் தமிழ்மக்களுக்கான தலைமைத்துவத்தில் தவறுவிட்டிருக்கிறார்கள் என்றே பலரும் கருத ஆரம்பித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அன்று புலிகளின் அரசியலையும் மக்கள் விரோத போக்கையும் கண்டித்தவர்கள் இன்று அதே பாணியில் அரச படைகளினால் செய்யப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகயை செய்ய அனுமதித்ததில் ஈபிடிபியின் தவறும் உள்ளது என்பதை மக்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். கட்சிகள் மாறும் அரசுகள் மாறும் ஆனால் வரலாற்று பதிவுகள் மாறாது. மக்கள் மனதில் பதியப்பட்ட வடுக்கள் கோபங்கள் ஆற்ற முயற்சிக்க தவறும் பட்சத்தில் ஈபிடிபியின் தலைமையும் தலைமைத்துவ பண்பும் கேள்விக்குள்ளாகும் புலிகளின் தவறான அணுகுமுறையுடன் ஒப்பிடப்பட்டே வரலாறு எழுதப்படும்.

இலங்கை அரசும், தமிழ் பேசும் மக்களின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றியே வருகின்றனர் என்பதற்கு யாழ் பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல்கள் நல்ல எடுத்துக்காட்டாகும்.

யாழ் பல்கலையில் அரசு நடாத்திய அராஜகத்திற்கு எதிராக தமிழ் சிங்கள மாணவர்களின் ஒன்றிணைந்த நாடு தழுவிய போராட்டமானது இலங்கையில் புதிய வரலாற்றுக்கான ஒரு விடியலேயாகும்.

மீபத்தில் இலங்கையில் அதிக மக்களின் கவனத்தினை ஈர்த்த விடயமாக யாழ் பல்கலைகழக மோதல் அமைந்துள்ளது.

மீண்டும் இனவாதத்தினை கூர்மைப்படுத்தும் வேலைகளும் இதன் பின்னணியில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் இடைம்பெற்ற மோதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு 22 வயதுடைய நாவலாசிரியர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார்.

இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரும், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான, அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்று வருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்ணே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதாவது,

“எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன்.

நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவரே நான்.

தாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்ப்போமாயின், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது.

ஆம், நாம் அனைவரும் பெரும்பான்மையினர்களே எங்களால் அனைவர் முன்னாலும் வாழ இயலும் இருப்பினும் இதை உணர்வார் எவரும் இல்லையே,

பல தசாப்தங்களாக இடம் பெற்ற மோதல் குறித்தான நியாயமான கோபங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

குற்றங்கள் எமது மக்களுக்கு எதிராகவே இடம் பெறுகின்றன. இது புரியாமல் கண்மூடித்தனமாக அனைவருக்கும் உற்சாகமூட்டுகின்றோம். இவை அனைவரினதும் அறியாமையா?

நாம் அனைவரும் இலங்கையர்களே! எமது பெற்றோர்கள் மற்றும் முதியவர்களின் தவறுகளை ஏன் நாமும் எமது வாழ்வில் பின்பற்ற வேண்டும்? எமது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

ஆனால் இதற்கான தீர்வு வன்முறை கிடையாது.

உரிமை பற்றி கூறுவதற்கு இவள் யார் என்று நீங்கள் சிரிக்க கூட நேரிடும்?ஆனால் சற்று அமைதியாக இருந்து யோசிப்போமாயின் சர்வதேச ரீதியில் அதிகளவான மனிதாபிமான சட்டங்கள் இருக்கின்றன. பின்னர் எதற்கு வன்முறை?

இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்றன. அதன் பின் என்ன ஆயிற்று? அநீதியான முறையிலேயே அனைத்து மோதல்களும் இடம் பெறுகின்றன.

ஆனால் இது உங்களது நேர்மையான தீர்வு. சிலருக்கு தெரியும் சிங்களவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று. ஆனால் வன்முறை ஒரு சிறந்த வழியாக இருக்க முடியாது.

இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏன் இந்த அவல நிலை. நாம் கண்டிப்பாக கடந்த தசாப்தங்களில் இடம் பெற்ற வன்முறைகளை முற்றாக அகற்ற வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

நீங்கள் தலைமறைவாகவோ அல்லது சிறையில் கைதிகளாகவோ, தெருக்களைச் சேர்ந்தவர்களோ அல்ல நீங்கள் அதிகார அந்தஸ்தில் உள்ளவர்கள்.உங்களால் சில கொள்கைகளுக்காக போராட இயலும்.

இலங்கையில் அரசியலில் மாத்திரம் சிறுபான்மை இல்லை என்பதை மறக்க வேண்டும், முற்றாக மாற்ற வேண்டும்.

பாதையில் பெண்களுக்கு தனியாக நடந்து செல்ல முடிகின்றதா? உடல் ரீதியாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

நாம் இந்த உலகத்தில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

இவ்வாறு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுவதை எம்மால் தடுக்க இயலும். எங்களைச் சூழ உள்ளவர்களை மாற்றினால் மாத்திரமே இதை அடையவும் முடியும்.

வன்முறை இல்லாத வாழ்வை தெரிவு செய்து எதிர்காலத்தை செம்மை படுத்துவோம்”

 

SHARE